2 ஆண்டுகளில் பிடி கத்திரிக்காய் நனவாகும்- தமிழ்நாடு வேளாண் பல்கலை.
கோவை: பிடி கத்திரிக்காயை அனுமதிப்பதில்லை என்று தமிழக அரசு தானாக முன்வந்து ஒரு முடிவை எடுத்துள்ள நிலையில், தமிழக அரசின் கோவை வேளாண் பல்கலைக்கழகம், இன்னும் 2 ஆண்டுகளில் பிடி கத்திரிக்காய் நிஜமாகும் என்று கூறியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான முருகேச பூபதி கூறுகையில், பிடி கத்திரிக்காய்க்கு இப்போதைக்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் தற்காலிக தடை விதித்திருந்தாலும் கூட இன்னும் 2 ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வருவது உறுதி. இருப்பினும் அதற்கு முன்பு விவசாயிகளுக்கு இதன் பலன்களை எடுத்துக் கூறி சம்மதிக்க வைக்க வேண்டும்.
பிடி கத்திரிக்காயின் சாதக அம்சங்களை அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். அதற்கு கால அவகாசம் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
பிடி பருத்தியை மக்கள் மத்தியில் பிரபலமாக்க கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் பிடித்தது. அதுபோலவே பிடி கத்திரிக்காய்க்கும் கால அவகாசம் தேவைப்படும். இருப்பினும் இது கண்டிப்பாக நடைமுறைக்கு வரும்.
தற்போது பிடி கத்திரிக்காய்க்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருபவர்கள் உர விற்பனையாளர்களின் பினாமிகள்தான். உர விற்பனை அடியோடு குறைந்து நசிந்து போய் விடும் என்ற பயத்தில்தான் இப்படி தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள் உரத் தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும்.
ஒரு தொழில்நுட்பம் நல்லதா, கெட்டதா என்பதை நிர்ணயிக்கக் கூடிய நடுவர்கள் விவசாயிகள் மட்டும்தான்.
பிடி கத்திரிக்காயின் சிறந்த அம்சங்கள் என்று பார்த்தால், அதை பூச்சிகள் தாக்காது, எந்தவித பின்விளைவுகளும் இல்லாத தூய்மையான காய்களை விவசாயிகள் அறுவடை செய்ய முடியும். சிறந்த சந்தை மதிப்பு கிடைக்கும். நுகர்வோரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
தற்போது உள்ள கத்திரிக்காய்களில் 70 சதவீதம் பூச்சிகளால் பாதிக்கப்படுகின்றன. புழுக்களும் ஊடுறுவி விடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
தமிழ்நாட வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பல்வேறு பயிர்களை விவசாயிகள் ஏற்றுக் கொண்டு பயிரிட்டுள்ளனர். தற்போது உள்ள கத்திரிக்காயின் மேம்பட்ட நான்கு ரகங்களை (பிடி கத்திரிக்காய்) வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. அதை பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர் உருவாக்கியுள்ளோம்.
இருப்பினும் பிடி கத்திரிக்காய்க்கு தற்போது அரசு தற்காலிக தடை விதித்திருப்பதால் அந்தத் தடை நீங்கும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளோம்.
நாங்கள் உருவாக்கியுள்ள இந்த நான்கு புதிய ரக கத்திரியும், விவசாயிகளின் நலனை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். யாருடைய நிர்பந்தமோ, வெளிநாட்டு நிறுவனங்களின் வற்புறுத்தலோ இதில் இல்லை.
மான்சான்டோ அல்லது மஹிகோ ஆகிய நிறுவனங்களின் ஹைபிரிட் விதைகளை நாங்கள் தொடக் கூட இல்லை. இங்குள்ள விவசாயிகளிடம் பெற்ற விதைகளை வைத்துத்தான், பல்கலைக்கழகத்தின் நான்கு மையங்களில் ஆய்வு நடத்தி இந்த மேம்பட்ட ரகங்களை உருவாக்கியுள்ளோம்.
பிடி கத்திரிக்காய் குறித்த தவறான எண்ணங்களை மக்கள் மனதிலிருந்து நீக்க தனி நிபுணர் குழுவை அமைத்து, எலிகள், முயல்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு சோதனைகள் நடத்திப் பார்க்கலாம் என்று வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியுள்ளது சரியான யோசனைதான்.
கத்திரிக்காய் நமது நாட்டின் பயிர். அதற்கு இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது என்றார் பூபதி.
இந்தியாவிலேயே அதிக அளவில் கத்திரியைப் பயிரிடும் முன்னணி மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இங்கு ஆண்டுக்கு இருமுறை, 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கத்திரி பயிரிடப்படுகிறது. ஆறு மாதங்களில் ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 டன் கத்திரி வரை அறுவடை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications