பிரபல நிறுவன குளிர்பானத்தில் பல்லியின் சிதைந்த உடல்!
தூத்துக்குடி: ஒன்றரை லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரபல நிறுவனத்தின் குளிர்பான பாட்டிலில் இறந்த பல்லி கிடந்ததாக தூத்துக்குடி நகர நுகர்வோர் ஆதாரத்துடன் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனித உரிமைகள் கழகத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.
மனித உரிமைகள் கழக மாவட்டத் தலைவர் டி.ஜே. கார்த்திகேயன், மாவட்டச் செயலர் என். சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் பிரபலமான நிறுவனத்தின் குளிர்பான பாட்டிலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரனை சந்தித்து அளித்த புகார் மனு விவரம்:
எங்களது அமைப்பின் உறுப்பினரான தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 1-வது தெருவைச் சேர்ந்த பி. ராஜாராம், 4.1.2010 அன்று ஒன்றரை லிட்டர் கொள்ளவு கொண்ட 2 குளிர்பான பாட்டில்களை வாங்கினார். அந்த பாட்டில்களில் 14.12.2009-ல் தயார் செய்யப்பட்டவை எனவும், பேட்ச் நம்பர் 247 எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில் ஒரு பாட்டிலின் சீலை உடைத்து, விருந்தாளிகளுக்கு அளித்து தானும் குடித்துள்ளார். அப்போது அந்த பாட்டிலில் தூசி படிந்திருப்பதையும், சுவை மற்றும் மணம் வேறு மாதிரி இருப்பதையும் அவர் உணர்ந்தார். உடனே உடைக்கப்படாத மற்றொரு பாட்டிலை பார்த்தபோது ஏதோ அழுக்கு மிதப்பதைக் கவனித்தார்.
அது இறந்துபோன பல்லியின் சிதைந்த உடல் என்பது தெரியவந்தது. பல்லியின் கால்கள் அந்த பாட்டிலில் மிதப்பதை தெளிவாக காண முடிந்தது. உடனே அந்த பாட்டிலை ராஜாராம் உடைக்காமல் வைத்துவிட்டார்.
பொதுமக்கள் அதிகமாக பருகும் குளிர்பானத்தை நல்ல முறையில் எவ்வித கேடும் விளைவிக்காத வகையில் தயார் செய்வது அந்த நிறுவனத்தின் கடமையாகும். ஆனால் அந்த நிறுவனம் கடமையில் இருந்து தவறி, நுகர்வோருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தரம் குறைந்த குளிர்பானத்தை விநியோகம் செய்துள்ளனர். தரம் குறைந்த குளிர்பானத்தைப் பருகுவதால் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்பட கூடிய அபாயம் உள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த நிறுவனத்தின் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடை செய்ய வேண்டும், என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications