விலைவாசி: எதிர்க் கட்சிகள் அமளி-இரு அவைகளும் ஒத்திவைப்பு

முன்னதாக விலைவாசி உயர் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடந்த வேண்டும் என்ற எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில், விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும். இதற்காக அவையின் பிற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்திருந்தன.
ஆனால் அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டது. தற்போதுள்ள சூழலில் இது பொருத்தமானதாக இருக்காது என்று அரசு காரணம் கூறியுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால் கூறுகையில், விலைவாசி உயர்வு குறித்த பிரச்சினையை விதி எண் 193ன் கீழோ அல்லது குறுகிய கால விவாதமாகவோ எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவையின் அலுவல்களை ஒத்திவைத்து விட்டு விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒத்திவைப்புத் தீர்மானமும் அவசியமில்லை.
அவர்களுக்கு (எதிர்க்கட்சியினர்) விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்ற அக்கறை உண்மையிலேயே இருந்தால், 193ன் கீழ் விவாதிக்க முன்வர வேண்டும். அந்த விவாதமே கிட்டத்தட்ட 7 மணி நேரம் வரை நீடிக்க வகை உள்ளது. மாறாக ஒத்திவைப்புத் தீர்மானத்தையே அவர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கக் கூடாது. உண்மையில் ஒத்திவைப்புத் தீர்மானம் என்பது இரண்டரை மணி நேர விவாதம்தான் என்றார்.
எதிர்க் கட்சிகளுக்கு திமுக-மம்தாவும் ஆதரவு:
விலைவாசி குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் திமுக, திரிணமூல் உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணி அரசின் கட்சிகளும் கூட வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இன்று மக்களவை, மாநிலங்களவை கூடியதும் எதி்ர்க் கட்சிகள் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தும் வகையில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரின.
ஆனால், இந்த கோரிக்கை ஏற்கப்படாததால் பாஜக, இடதுசாரிகள், சமாஜ்வாடிக் கட்சி ஆகியவற்றின் எம்பி்க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. ஆனால், மக்களவை மீண்டும் கூடிய போதும் அமளி நீடித்ததால் நாளை காலை 11 மணி வரை அவையை ஒத்திவைத்து சபாநாயகர் மீராகுமார் உத்தரவிட்டார்.
அதே போல ராஜ்சபாவிலும் அமளி நீடித்ததால் இன்று நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications