இந்த பெரியவர்கள் இருக்கப் போய்த்தான் கொஞ்ச நஞ்சம் மழையும் பெய்கிறது-ராமதாஸ்
பென்னாகரம்: பென்னாகரம் தொகுதியில் உள்ள பெரியோர்களை பார்க்கும் போது தற்போது பெய்கிற கொஞ்சம் நஞ்சம் மழை கூட இவர்களுக்கு தான் பெய்கிறது என்று தோன்றுகிறது என்று கூறினார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலுக்கான பூர்வாங்கப் பணிகளை ஏற்கனவே திமுகவும், பாமகவும் முடித்து விட்டன. அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. தேமுதிக போட்டியிடுமா என்று தெரியவில்லை.
இந் நிலையில் டாக்டர் ராமதாஸ் தீவிரப் பிரசாரத்தில் குதித்து விட்டார். பென்னாகரம் தொகுதியில் தீவிர பிரசாரம் செய்தார். பரப்பட்டி, சந்தாரப்பட்டி, ராமர்கூடல், கெட்டுஅள்ளி, பங்குநத்தம், ராஜாகொல்லஅள்ளி, பண்டஅள்ளி, நல்லானூர், குள்ளனூர், ராமனூர், வேலம்பட்டி, பிளப்பநாயக்கனஅள்ளி, குஞ்சுக்கொட்டாய், திகிலோடு, ஆலமரத்துப்பட்டி, பூச்செட்டிஅள்ளி, தளவாய்அள்ளி, நத்தஅள்ளி உள்பட பல்வேறு கிராமங்களில் பாமக வேட்பாளர் தமிழ்குமரனை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின்போது 120 வயதான பாட்டியை அவரிடம் அறிமுகப்படுத்தினர். அவரிடம் மாம்பழச் சின்னத்திற்கே வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டார் ராமதாஸ்.
பின்னர் சந்தாரப்பட்டியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் பேசுகையில்,
பென்னாகரம் தொகுதியில் உள்ள மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமலும், தொழில்வளம் இல்லாமலும் சமுதாயத்தில் பின் தங்கி வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு நன்மை செய்ய பாமக வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும்.
இந்த பகுதியில் உள்ள பெரியோர்களை பார்க்கும் போது தற்போது பெய்கிற கொஞ்சம் நஞ்சம் மழை கூட இவர்களுக்கு தான் பெய்கிறது. இதுபோன்ற நல்லவர்களின் வாழ்க்கை தரம் முன்னேற என்றும் நாம் பாடுபடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications