புதிய சட்டசபை வளாகம் வேகமாக கட்டப்படுவதை எதிர்த்து வழக்கு
சென்னை: அதி வேகமாக கட்டப்பட்டு வரும் புதிய சட்டசபை வளாகத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பெரணமல்லூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
தமிழக சட்டசபைக்கு புதிதாக கட்டிடம் கட்டுவது நல்லதாக இருந்தாலும், அதற்கான பணிகள் வேக, வேகமாக நடைபெற்று வருவது அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பு கவனத்தில் கொள்ளப்படவில்லை.
தொழிலாளர்களின் பாதுகாப்பு விஷயத்தில் அரசு அஜாக்கிரதையாக இருப்பதால் சில தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டது.
புதிய சட்டசபை வளாகம் 86 ஆயிரத்து 458 சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.425 கோடியே 57 லட்சம் செலவில் 6 மாடியுடன் கட்டப்படுகிறது. புதிய சட்டசபை வளாகத்தை மார்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய சட்டசபை கட்டிடத்துக்குள் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். ஆனால், அந்த கட்டிடம் வேக, வேகமாக கட்டப்பட்டு வருவதால் கட்டிடத்தின் உறுதி மற்றும் ஸ்திரத்தன்மையில் சந்தேகம் எழுந்துள்ளது.
கட்டிடம் கட்டப்படும் நிலப்பரப்பில் கட்டிடத்தை தாங்கும் நிலையில் மண் இருப்பதாக தெரியவில்லை.
எனவே, கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையை பற்றி ஆய்வு செய்ய மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் அல்லது தகுதி வாய்ந்த அதிகாரிகள் கொண்ட நிபுணர் குழுவை அமைக்கவேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோருக்கு 4.2.2010 அன்று மனு கொடுத்தேன்.
ஆனால் அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை. எனவே, அரசுக்கு நான் வழங்கிய மனுவை பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications