விலைவாசி உயர்வு- லோக்சபாவில் வாக்கெடுப்பில்லாத விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் ஒப்புதல்
டெல்லி: விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பாக வாக்கெடுப்பில்லாத விவாதத்தை நடத்த பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து நாளை இந்த விவாதம் லோக்சபாவில் நடைபெறும் எனத் தெரிகிறது.
அவை விதி எண் 193ன் கீழ் இந்த விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விதியின் கீழ் விவாதம் நடத்தப்பட்டால் அதை வாக்கெடுப்புக்கு விட முடியாது.
முன்னதாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக கோரி வந்தன. அந்த முடிவில் பிடிவாதமாக இருந்தன. ஆனால் அரசுத் தரப்பிலோ வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்திற்குத் தயாராக இல்லை.
கூட்டணிக் கட்சிகளில் சிலவும் கூட விலைவாசி உயர்வுப் பிரச்சினையில் அரசுக்கு எதிரான கருத்தில் இருப்பதால் வாக்கெடுப்பின்போது தோற்று விட்டால் பெரும் சிக்கலாகி விடுமே என்பதால், வாக்கெடுப்பை அரசு விரும்பவில்லை.
ஆனால் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்புடன் கூடிய விவாதமே நடத்தப்பட வேண்டும் என கோரி நேற்று முதல் பிடிவாதமாக இருந்து வந்தன. இதனால் நேற்று லோக்சபாவை நடத்த முடியவில்லை. ராஜ்யசபாவையும் நடத்த முடியவில்லை.
இன்றும் ராஜ்யசபா அலுவல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் லோக்சபா இன்று தப்பியது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் தனது நிலையை பாஜக மாற்றிக் கொண்டது. விதி எண் 184ன் கீழ் விவாதம் வேண்டும் என்று கோரி வந்த பாஜக தற்போது 193ன் கீழ் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டுள்ளது.
இதை லோக்சபா பாஜக துணைத் தலைவர் கோபிநாத் முண்டே உறுதிப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications