பாக். தொழிலதிபருக்கு மூளை பேஸ்மேக்கர் பொருத்தும் ஆபரேஷன்- சென்னையில் நடந்தது
சென்னை: பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபருக்கு 'மூளை பேஸ்மேக்கர்' (Implanted pulse generator-IPG) பொருத்தும் முக்கிய ஆபரேஷன் சென்னையில் வெற்றிகரமாக நடந்துள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரைச் சேர்ந்தவர் முகம்மது ஆரிப் (56). இவருக்கு கடந்த 2005ம் ஆண்டு பர்கின்சன் நோய் தாக்கியது. இதையடுத்து அவரது மூளையின் சில பகுதிகளில் செயல்பாடுகளைத் தூண்டி விடுவதற்காக (Deep brain stimulation - DBS) என்ற ஆபரேஷன் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆனால் இந்த அறுவைச் சிகிச்சை வசதி பாகிஸ்தானில் எங்குமே இல்லை. சிங்கப்பூருக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ சென்று இதை செய்யுமாறு டாக்டர்கள் ஆரிப்பின் குடும்பத்தினரை அறிவுறுத்தினர்.
இருப்பினும் ஆரிப்பின் குடும்பத்தினர் அங்கு செல்லாமல் இந்தியாவில், சென்னைக்கு வந்து சிகிச்சை பெற விரும்பினர். இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர்கள் வந்தனர்.
இதுகுறித்து ஆரிப்பின் மகன் பைக் ஆரிப் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாகிஸ்தானில் பர்கின்சன் நோய்க்கான சிகிச்சை வசதிகள் இல்லை. சிங்கப்பூருக்கோ அல்லது அமெரிக்காவுக்கோதான் செல்ல வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் நாங்கள் இந்தியாவுக்கு வந்தோம். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தந்தையை அனுமதித்தோம். தற்போது அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் எனது தந்தையின் நிலையில் கிட்டத்தட்ட 70 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 9 லட்சம் செலவானது. ஆனால் அமெரிக்காவில் செய்திருந்தால் இதை விட பல மடங்கு அதிகமாக செலவாகியிருக்கும் என்றார்.
DBS என்பது IPG எனப்படும் மூளை பேஸ் மேக்கர் சாதனம் உள்ளிட்ட மூன்று முக்கிய சாதனங்களை பொருத்தும் அறுவைச் சிகிச்சையாகும். ஐபிஜி சாதனம், மூளையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிர்வை ஏற்படுத்தி அதன் செயல்பாட்டை தூண்டுவிக்கும்.
பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த அறுவைச் சிகிச்சை அவசியமாகும். ஆரிப்புக்கு, பிப்ரவரி 7ம் தேதி இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 13 முதல் 14 மணி நேரம் வரை இந்த ஆபரேஷன் நடந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications