காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் பலி
தஞ்சாவூர்: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவவீரர் ஒருவர் பலியானார்.
வடக்கு காஷ்மீரில் உள்ள சிபோரே மாவட்டம் சிங்கிபுரா மலைப்பகுதியில் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் 5 பேர் மறைந்து இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.
அப்பகுதிக்கு சென்ற ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய தரப்பில், ராணுவ அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
இதில் உயிரிழந்த ராணுவ வீரர்களில் ஒருவரான செல்வக்குமார் தஞ்சையை அடுத்த விளார் அருகே உள்ள நடுவூரை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் பஞ்சநதம் தென்கொண்டார். தாயார் பெயர் கமலாம்பாள்.
செல்வக்குமார் ராணுவத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தார். பெங்களூரில் பணிபுரிந்து வந்த அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் சென்றார்.
அவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சத்யா தற்போது தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட் படித்து வருகிறார். குழந்தை இல்லை.
செல்வக்குமாரின் உடல் சென்னை வழியாக இன்று காலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications