தொண்டையில் குண்டடி: போலீஸ்காரரை 10 மணி நேரம் தவிக்க விட்ட ஜி.எச்.
சென்னை: பயிற்சியின் போது துப்பாக்கி தோட்டா தொண்டையில் பாய்ந்து துடிதுடித்த போலீஸ்காரருக்கு சென்னை அரசு மருத்துவமனையில் 10 மணி நேரம் கழித்தே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆயுத பாதுகாப்பு பிரிவில் தலைமை காவலராக வேலை பார்த்து வருபவர் சண்முகம் (42).
இவர் நேற்று முன்தினம் சிங்கபெருமாள் கோவில் அருகில் உள்ள அனுமந்தபுரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டின் ஒரு சிதறல் சண்முகத்தின் தொண்டையில் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த சண்முகம் நேற்று முன்தினம் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு காயத்தில் மருந்து போடப்பட்டது. ஆனால் அவரது தொண்டையில் பாய்ந்த ஆபத்தான நிலையில் சிக்கியிருந்த துப்பாக்கியின் சிதறலை அறுவை சிகிச்சை செய்து எடுக்கவில்லை.
காவலர் தரப்பில் இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, பெரிய மருத்துவர்கள் வருவதற்காக இரவு வரை காத்திருக்குமாறு கூறியுள்ளனர்.
பகல் 12 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சன்முகத்திற்கு, இரவு 10 மணிக்கே அறுவை சிகிச்சை நடந்தது. தொண்டையில் தோட்டா சிதறல் பட்டு காயமடைந்த காவலருக்கு சுமார் 10 மணிநேரம் கழித்து அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரயில் நிலையத்தில் மயக்கமடைந்த பெண்ணை காப்பாற்றி கொண்டு வந்த போலீஸ்காரரிடம் 'சார்ஜ் ஷீட்' கொண்டு வந்தால் தான் சிகிச்சையளிக்க முடியும் என்று கூறி, அப்பெண்ணை மருத்துவமனை வராண்டாவில் படுக்க வைத்து வேடிக்கை பார்த்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications