மேலும் பல அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுகவுக்கு வருவர் - அழகிரி

முன்னாள் அதிமுக அமைச்சர் சத்தியமூர்த்தி மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்து தன்னை திமுகவில் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
லேட்டஸ்டாக திமுகவுக்கு வந்து இணைந்துள்ள முன்னாள் அதிமுக பிரபலம் இவர்.
அதிமுகவிலிருந்து பலரையும் வலை வீசி திமுகவில் இணைத்து வருகின்றனர். சிலர் தாங்களாகவே வந்து சேர்கின்றனர்.
முன்னாள் அமைச்சர்களான செல்வகணபதி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஏற்கனவே திமுகவில் ஐக்கியமாகி விட்டனர்.
சமீபத்தில் கோவில்பட்டி மற்றும் ஜெயங்கொண்டம் அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுக பக்கம் சாய்ந்தனர். இருவரும் திமுக பொதுக்குழுக் கூட்டத்திலும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தங்களது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டனர்.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து விலகிய மாஜி அமைச்சர் சத்தியமூர்த்தி இன்று திமுகவுக்குத் தாவினார். மதுரையில் மு.க.அழகிரியை சந்தித்துப் பேசிய அவர் அவரிடம் தன்னை திமுகவில் இணைத்துக் கொள்வதாக தெரிவித்தார். அவருடன் சில ஆதரவாளர்களும் வந்து திமுக ஜோதியில் கலந்தனர்.
மேலும் பல எம்.எல்.ஏக்கள் வருவர்..
பின்னர் மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அ.தி.மு.க., ஒரு குடும்பத்தினரின் கையில் உள்ளது. ஜெயலலிதாவிடம் இல்லை. அதன் காரணமாக தி.மு.க. வின் பொற்கால ஆட்சியை கருத்தில் கொண்டு சத்தியமூர்த்தி போன்றவர்கள் தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர்.
2011ல் அதிமுக காணாமல் போகும். உதிரிக் கட்சிகளே இல்லை என்ற நிலை உருவாகும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அதனுடைய முன்னோட்டம் தான் இன்று சத்தியமூர்த்தி திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து மேலும் பல எம்எல்ஏக்கள் திமுகவில் விரைவில் இணைவார்கள். அது சஸ்பென்ஸ் என்றார்.
தேமுதிக தனித்து ஆட்சியைப் பிடிக்கும் என்று விஜயகாந்த் கூறியிருந்தார். இப்போது கூட்டணிக்கு தயார் என்று சொல்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அழகிரி, தேமுதிக ஒரு கட்சியே கிடையாது. முன்பு நான் சொன்னது போல் உதிரிக் கட்சிகள் 2011ல் இருக்காது என்றார்.
அழகிரி பார்த்துக் கொள்வார்...
சத்தியமூர்த்தி பேசுகையில்,
அதிமுக தலைமை உண்மையான தொண்டர்களை புறக்கணிக்கிறது. அதிமுக ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. 100 பேர் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு குடும்பம் செயல்படுகிறது. அந்த குடும்பம் அதிமுக தொண்டர்களை வைத்து பணம் சம்பாதித்து, உள்நாடுகளிலும், வெளிநாடுகளிலும் தொழில் செய்து வருகிறது.
100 பேர் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா ஒரு கோடி அதிமுக தொண்டர்களை இழந்து வருகிறார். அதிமுகவில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை. கட்சிக் கூட்டங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்களுடன் விரைவில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்து பணியாற்றுவேன்.
திருமங்கலம், திருச்செந்தூரில் எப்படி திமுக வெற்றி பெற்றதோ, அதேபோல் பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுகதான் வெற்றி பெறும். பென்னாகரம் வெற்றியை அழகிரி பார்த்துக் கொள்வார்.
திமுகவின் தலைமையும், திமுகவினரின் அணுமுறையும் தான் மக்களுக்கு பிடித்திருப்பதால், பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications