சமத்துவ மக்கள் கட்சிக்கு நல்ல காலம் வரும்- சரத் நம்பிக்கை
குற்றாலம்: தமிழக அரசியலில் எங்களுக்கு நல்ல காலம் வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான சரத்குமார்.
குற்றாலத்தி்ல் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சமத்துவ மக்கள் கட்சி பொன்னாகரம் இடைத்தேர்தலில் போட்டியிடுமா என்பது குறித்து வரும் 28ம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்படும்.
கட்சியின் பொதுக்குழு வரும் ஏப் 11ம் தேதி நடைபெறுகிறது. அப்போது எங்களது நிலைப்பாடு குறித்து விவாதித்து நல்ல முடிவை எடுப்போம்.
தமிழக அரசியலில் எங்களுக்கு நல்ல காலம் வரும். கட்சியில் புதிய பொறுப்புகளுக்கு வந்துள்ளவர்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்திடுமாறு கூறியுள்ளேன்.
அரசியல் களம் இப்போது மாறிவிட்டது. பண பலம் அதிகரித்து விட்டது. வெற்றி-தோல்வி அரசியலில் சகஜம். எங்கள் கட்சி கொள்கை, மக்கள் சேவையை முன்னிலை படுத்தியே செயல்பட்டு வருகிறது.
திமுக ஆட்சியில் மக்களுக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் மனநிலை எப்படி உள்ளது என்று யாருக்கும் தெரியாது. நல்லது செய்தாலும், ஊழல் செய்தாலும் தேர்தல் நேரத்தில் மக்கள் எடுக்கும் முடிவு என்ன என்பது யாருக்கும் தெரியாது.
மு.க.அழகிரி 2011 தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறுகிறார். அதே எண்ணத்தில் ச.ம.க.வினரும் உறுதி கூற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications