தமிழகம்: புதிய சட்டசபை வளாகத்தை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
சென்னை: சென்னையில் அமைக்கப்பட்டு வரும் புதிய சட்டசபை வளாகத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சட்டசபை வளாகம் மற்றும் தலைமை செயலக கட்டிடப் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.
ஆனால், அந்த கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாமல் அரசு அஜாக்கிரதையாக செயல்படுவதால் சிலர் காயம் அடைந்திருப்பதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும், கட்டிடப் பணிகள் முடிவடையாத நிலையில், அவசரகதியில் வரும் மார்ச் 13ம் தேதி திறப்பு விழா நடக்கிறது. இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழலில் விழாவில் பிரதமர் பங்கேற்பதை அனுமதிக்கக் கூடாது என்றும் அதிமுக வக்கீல்கள் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி கே.கே.சசீதரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த கட்டிடத்தை பற்றிய ஆய்வை மனுதாரர் ஏ.கே.எஸ்.அன்பழகன் ஆய்வு செய்தாரா அல்லது நிபுணர்கள் செய்த ஆய்வின் அடிப்படையில் இந்த கட்டிடத்தை பற்றி குறிப்பிட்டுள்ளாரா? என்பது இந்த மனுவில் கூறப்படவில்லை.
மனுதாரர் பொறியியல் கல்வி பயின்றிருந்தாலும், இந்த கட்டிடம் பற்றிய கூடுதல் விவரங்களை இந்த மனுவில் அவர் தெரிவித்திருக்க வேண்டும். கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் மண் அமைப்பு ஆகியவற்றை பற்றிய சந்தேகங்களை எழுப்பும்போது சில ஆதாரங்களை குறிப்பிட வேண்டும்.
அது இல்லாததால், இந்த மனுவை ஏற்க முடியாது. அதுபோல் வக்கீல் ஆர்.பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்த பொது நல மனுவில் முல்லைபெரியாறு, காவிரி உள்ளிட்ட விவகாரங்களை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
கட்டுமானம் முழுமை அடையாமல் உள்ள நிலையில் அந்த கட்டிடத்தை பற்றிய சான்றுறுதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளான பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்கள் (மின்சாரம் மற்றும் கட்டிடம்) ஆகியோர் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால், இந்த சான்றுறுதி கேட்டு அவர்களிடம் மனுதாரர் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தாரா? அப்படி கொடுத்த விண்ணப்பத்துக்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனரா? போன்ற விவரங்களை எல்லாம் மனுவில் கூறப்படவில்லை. இதுபோன்ற தகவல்கள் இல்லாத மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications