மமதாவின் பட்ஜெட்டை முட்டையுடன் ஒப்பிட்டு ஜெ. வரவேற்பு
சென்னை: அதிமுக கொடுத்த பல்வேறு கோரிக்கைளை ரயில்வே பட்ஜெட்டில் சேர்த்துள்ள மமதா பானர்ஜியைப் பாராட்டுவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
2010-2011-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்யும்போது, நெருக்கடியான நேரத்தில் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை உயர்த்தாமல், தொலைநோக்கு பார்வையையும் குறுகியகால தேவைகளையும் சமமாகவும், மிகவும் நேர்த்தியாகவும் கையாண்டிருப்பதை பாராட்டியாக வேண்டும்.
ரயில்வே தனியார் மயமாக்கப்படமாட்டாது என்று மம்தா பானர்ஜி கூறி இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. அதே நேரத்தில் ரயில்வே திட்டங்களுக்கு தனியாருக்கும் அழைப்பு விடுத்திருப்பது நடைமுறையை காட்டுகிறது. கிராமத்தில் உள்ள சாதாரண மனிதன் வரை ரயில்வேயை கொண்டு போய் இருக்கிறார். புதிய ரயில்கள், பயணிகள் வசதிக்கு கூடுதல் நிதி, ரயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் தயாரிப்பு ஆலைகள் அமைப்பது ஆகியவை பொதுமக்களால் பாராட்டப்படும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ரயில்வே பட்ஜெட்டில் நல்லதும், கெட்டதும் கலந்து இருக்கிறது. பெரம்பூர் ரயில்பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) நவீனப்படுத்துவது, அங்கு 2-வது உற்பத்தி பிரிவு தொடங்குவது ஆகியவை வரவேற்கத்தக்கது.
அ.தி.மு.க. சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளான இரட்டை ரயில் பாதை அமைப்பது, சென்னை பறக்கும் ரயில் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குவது, ரயில் பாதையை மின்மயமாக்குவது, அகல ரயில் பாதை ஆகியவை ரயில்வே பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை-புதுச்சேரி இடையே மாமல்லபுரம் வழியாக கடற்கரையையொட்டி ரயில் பாதை அமைக்க ஒப்புதல் அளித்திருந்தால் தமிழக மக்கள் பாராட்டி இருப்பார்கள்.
ரயில்வே சர்வீஸ் கமிஷன் நடத்தும் தேர்வுகளை பிராந்திய மொழிகளில் எழுதலாம் என்று அறிவித்திருப்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக அமையும். சுருங்க சொன்னால், முட்டையில் நல்லது பாதி, கெட்டது பாதி என்பது போல ரயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications