எம்.எப்.உசேனுக்கு குடியுரிமை வழங்கியது கத்தார் அரசு

கத்தார் அரச குடும்பம் உசேனுக்கு குடியுரிமையை வழங்கியுள்ளதாக அந்த செய்திகள் கூறுகின்றன. இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு உசேன் அளித்துள்ள பேட்டியில், கத்தார் குடியுரிமை கிடைத்திருப்பதை கெளரவமாக கருதுகிறேன். அதேசமயம், எனது தாயகத்திலிருந்து நான் கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது எனக்கு வருத்தத்தைத் தருகிறது.
இந்தியாவில் பிறந்த ஓவியனான நான், கத்தார் குடியுரிமையை பெற வேண்டுமானால், இந்தியக் குடியுரிமையை நான் விட வேண்டும் என்றார்.
இதற்கிடையே இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டு விட்டு கத்தார் குடியுரிமையை ஏற்க உசேன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய சட்டப்படி ஒரு இந்தியர் இன்னொரு நாட்டின் குடியுரிமையுடன் இருக்க முடியாது. எனவே கத்தார் குடிமகனாக உசேன் மாற வேண்டுமானால் அவர் தனது பாஸ்போர்ட்டை இந்திய அரசிடம் ஒப்படைத்து விட்டு இந்தியக் குடியுரிமையை ரத்து செய்து கொள்ள வேண்டும்.
உண்மையில் கத்தார் குடியுரிமை கேட்டு உசேன் விண்ணப்பிக்கவில்லை. மாறாக கத்தார் அரசுதான் முன்வந்து அதைக் கொடுத்துள்ளது.
95 வயதான உசேன், கடந்த 2006ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார். இந்து கடவுள்களை நிர்வாணமாக அவர் படம் வரைந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின. வழக்குகளும் தொடரப்பட்டன. அவருக்கு அரசுத் தரப்பிலும் ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.
அதன் பின்னர் துபாயிலும், லண்டனிலுமாக மாறி மாறி வசித்து வருகிறார்.
உசேனும், அவரைச் சுற்றி வந்த சர்ச்சைகளும்...
1996 - இந்துக் கடவுள்களின் நிர்வாண கோல படங்களை வெளியிட்டார். ஓவியங்களை தான் 70களில் வரைந்ததாகவும் இப்போது அதை வெளியிடுவதாகவும் அவர் கூறினார்.
உசேனுக்கு எதிராக 8 கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன.
1998 - உசேனின் வீட்டை பஜ்ரங் தளத் தொண்டர்கள் தாக்கினர். அவரது ஓவியங்கள் கிழித்தெறியப்பட்டன. சிவசேனா இதை ஆதரித்தது.
1999 - இந்தியாவில் உசேனுக்கு எதிராக எழுந்த பெரும் கோப அலைகளைத் தொடர்ந்து லண்டனில் உசேனின் ஓவியக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.
2006 - இந்திய கோர்ட்டில் உசேன் இந்துக் கடவுள்களை நிர்வாணமாக வரைந்ததன் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது
- உசேனுக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
நடிகை மாதுரி தீட்சித்தின் தீவிர ரசிகரான உசேன், அவரை வைத்து கஜகாமினி என்ற படத்தையும் உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications