அரிசி கடத்தல்காரர்களால் மிரட்டல்- அமைச்சர் வேலுவுக்கு கூடுதல் பாதுகாப்பு
சென்னை: தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அரிசிக் கடத்தல்காரர்களால் மிரட்டல் வந்துள்ளதால் இந்தப் பாதுகாப்பு என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றிக் கனியைப் பறித்துத் தரும் பொறுப்பு வேலுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்காக அவர் பென்னாகரம் தொகுதியில் முகாமிட்டு தீவிரப் பணியாற்றி வருகிறார். வழக்கமாக அமைச்சர்களுக்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 4 போலீஸ்காரர்கள் பாதுகாப்புக்கு செல்வது உண்டு. ஆனால் எ.வ. வேலுக்கு கூடுதலாக 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 8 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு செல்கிறார்கள்.
இதை தேர்தல் ஆணையத்திடம் சிலர் புகாராகக் கூறினர். இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, அமைச்சருக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருப்பது குறித்து தேர்தல் கமிஷன் கருத்தை கேட்டு கடிதம் எழுதி உள்ளார்.
இந்த நிலையில் தனது பாதுகாப்பு குறித்து வேலு விளக்கம் தந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்களை 6 மாதம், 1 வருடம் என சிறையில் அடைத்திருக்கிறோம். அது தவிர குண்டர் சட்டத்திலும் அரிசி கடத்தல் கும்பலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்.
இதன் காரணமாக வந்த மிரட்டல் தொடர்பாக எனக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு இப்போது கொடுக்கப்பட்டதல்ல, சில மாதங்களுக்கு முன்பே கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு விட்டது. வந்தவாசி இடைத்தேர்தலில் இருந்தே கூடுதல் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications