புனலூர்-கொல்லம் அகல பாதையில் சோதனை ஓட்டம்
புனலூர்: புனலூர்-கொல்லம் அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மதுரை கோட்டத்தில் விருதுநகர் - கொல்லம் இடையே அகல ரயில் பாதை அமைக்க கடந்த 1996-97ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.326 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விருதுநகர்-செங்கோட்டை இடையே 3ம் கட்டமாக அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுளளது.
4ம் கட்டமாக செங்கோட்டை-கொல்லம் மீட்டர் கேஜ் பாதையில் புனலூர்- கொல்லம் இடையே 45 கிமீ தூரம் அகல ரயில் பாதையாக மாற்றும் பணிக்காக செங்கோட்டை-கொல்லம் ரயில் புனலூரோடு நிறுத்தப்பட்டு புனலூர்-கொல்லம் அகல ரயில் பாதை பணி நடைபெற்று வந்தது.
இப்பணி கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்ததை தொடர்நது இந்த பாதையில் விரைவாக ரயிலை இயக்க வேண்டும் என்று ரயில்வே இணை அமைச்சர் அமகதுவிடம் கேரள எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். கடந்த 15 தினங்களாக பல்வேறு அடிப்படை வேலைகள், தண்டவாள பாதைகள் முழு வீச்சில் நடந்து முடிந்தன.
இதை தொடர்ந்து தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் கிரிஷன் தலைமையில் ரயில்வே உயர் அதிகாரிகள் காலை சிறப்பு ரயிலில் கொல்லத்தில் இருந்து புனலூர் வரை உள்ள பாதையில் அதிவேகத்தில் சிறப்பு ரயில் மூலம் 75 கிமீ வேகத்தில் சோதனை நடத்தினர்.
புனலூர்-கொல்லம் இடையே உள்ள ஆளில்லா ரயில்வே பாதையில் கேட் அமைக்கவும், ரயில் நிலையங்களில் சிக்னல் அமைக்கவும், தண்டவாளத்தின் உறுதி தன்மை ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், 'ஆய்வு முடிந்து விட்டது. ரயில்வே பாதுகாப்பு அதிகாரி பெங்களூரில் இருந்து வந்து சோதனை மேற்கொண்ட பின் சான்றளிப்பார். அதன்பின் அந்த தடத்தில் ரயில் போக்குவரத்து தொடங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.












Click it and Unblock the Notifications