விலைவாசி: ஏப். 21ல் நாடாளுமன்றத்தை முற்றுகையிட தமிழக பாஜக முடிவு
நாகர்கோவில்: விலைவாசி உயர்வை கண்டித்து வரும் ஏப் 21ம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
'கேரள பிரச்சனையில் வைகோ, ராமதாஸ் கூறும் கருத்துகள் பாஜகவுக்கு ஏற்புடையது அல்ல. முற்றுகை போராட்டம் நடத்துவோம் என கூறுவது மன, இன பிளவை ஏற்படுத்தும் விதமாக அமையும்.
அரசின் பிரச்சனையை அரசு தீர்த்து கொள்ள வேண்டும். அதனை மக்கள் பிரச்சனையாக ஆக்க கூடாது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவும், காங் கட்சியும் இணைந்தே தவறு செய்கின்றன.
தற்போதைய சூழ்நிலையில் விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. தினம் ஒரு விலை ஏற்றுத்துடன் உள்ளது. இதனை கண்டித்து குமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் துண்டு பிரச்சுரம் வினியோகம் செய்து வருகிறோம்.
ஒருபுறம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விலை இல்லாமல் விவசாயம் சீரழிந்து கொண்டு இருக்கிறது. மறுபுறம் ஏழை, எளிய மக்கள் அத்திவாசிய பொருட்கள் வாங்க முடியாமல் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசு திறமையாக செயல்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. விலைவாசி உயர்வை மத்திய அரசு, மாநில அரசு மாறி மாறி பொறுப்பை தட்டிக்கழிக்கின்றன.
இந்த அவல நிலையை தட்டிக்கேட்க அடுத்த கட்டமாக ஒன்றிய, நகர, மாவட்ட அளவில் போராட்டம் நடத்தப்படும். வரும் ஏப் 21ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்' என்றார்.












Click it and Unblock the Notifications