யானைமலை விவகாரம்: கருணாநிதிக்கு தெரியாமல் அரசாணையா? வைகோ கேள்வி

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, யானைமலையை உடைத்து, சிற்பக்கலை நகரம் அமைக்கும் திட்டத்தைத் தமிழக அரசு நிரந்தரமாகக் கைவிட வேண்டும்.
இதை வலியுறுத்தி மதிமுகவும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் மார்ச் மாதம் 4ம் தேதி ஒத்தக்கடையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்தோம்.
ஆனால், யானைமலையைக் குடையும் எண்ணமே அரசுக்கு இல்லை என்றும், அரசின் சார்பில் அவ்வாறு எந்த அறிவிப்பும் செய்யவில்லை என்று முதல்-அமைச்சர் விமர்சித்து உள்ளார்.
யானைமலை குறித்து, தமிழக அரசு சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அரசு செயலாளர் 2009 டிசம்பர் 30ம் தேதியிட்ட அரசு ஆணை (நிலை) எண் 227-ன்படி, மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ஒற்றைப்பாறையைக் குடைந்து, சிற்ப நகரம் உருவாக்க ஆய்வுக்குழு அமைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் உள்ள ஒற்றைப்பாறையைக் குடைந்து ஒரே கல்லில் பெரிய நகரத்தை உருவாக்குவது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஒரு ஆய்வுக்குழுவை ஏற்படுத்தி உள்ளதாக அரசு ஆணை தெரிவிக்கிறது.
அந்தக் குழுவில் அரசின் உயர் பதவிகளில் இருப்போர் இடம் பெற்று உள்ளனர். இந்தக்குழு முதல் நிலைக் குழுவுக்கான தகுதியைப் பெற்று உள்ளது என்றும் அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யானைமலையை உடைக்கவும், குடையவும், சிதைக்கவும் திட்டமிட்டுத்தான் இந்தக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், அப்படி ஒரு எண்ணமே இல்லை என்று முதல்-அமைச்சர் இப்போது சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
யானைமலையை உடைப்பதற்கு ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட முதல் நிலைக்குழு கலைக்கப்பட்டது என்றும், முந்தைய அரசு ஆணை ரத்து செய்யப்பட்டது என்றும் தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
அதுவரை யானைமலை பாதுகாப்புப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications