எயிட்ஸ் நோய்க்கு போலி மருத்துவர்கள்: அதிகாரிகள்
சேலம்: எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவதாக கூறி பணம் பறிக்கும் போலி டாக்டர்களை நம்பாதீர்கள் என்று சேலம் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் வலியுறுத்தியுள்ளார்.
சேலத்தில், எச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றி, மாவட்ட அளவில் ஊடக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் சேலம் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் கலந்து கொண்டு பேசுகையில்,
'தமிழ்நாட்டில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி, ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள 36 நம்பிக்கை மையங்களில் 56 ஆயிரத்து 690 கர்ப்பிணிகள் உள்பட ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.
இதில் 109 கர்ப்பிணிகள் உட்பட 2,048 பேருக்கு எய்ட்ஸ் நோய் தாக்கியுள்ளது தெரிய வந்ததது.
சேலம் புறநகர் பகுதியில் இருந்து வரும் எய்ட்ஸ் நோயாளிகள் எளிதாக மருந்து பெறுவதற்கு, சேலத்தை தவிர இடைப்பாடி, வாழப்பாடி, சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் ஆகியவற்றில் கூட்டு மருந்துகள் அளிக்கும் மையங்கள் துவக்கப்பட்டுள்ளன.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அளிக்கப்படும், ஆர்ட் என்ற கூட்டு மருந்து நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதை தடுக்குமே தவிர, கிருமியை அழிக்காது.
அதனால், எய்ட்ஸ் நோயை குணப்படுத்த மூலிகை மருத்துவம், சித்தா மருத்துவம் செய்வதாக கூறி, பல போலி டாக்டர்கள் நோயாளிகளிடம் பணம் பறித்து வருகின்றனர்.
அவர்களை யாரும் நம்ப வேண்டாம். அவ்வாறு சட்ட விரோத செயலில் ஈடுபடும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பெத்தடின் போன்ற போதை ஊசிகளை தொடர்ச்சியாக பயன்படுத்துபவர்களுக்கும் எய்ட்ஸ் நோய் வர வாய்ப்புள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications