ஈழத் தமிழர் நலன் குறித்து பட்ஜெட்டில் இல்லாதது வருத்தம்- திருமா.
சென்னை: ஈழத் தமிழர் நலன், மறுவாழ்வுத் திட்டங்கள் தொடர்பாக மத்திய பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் தருகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கையில் 5 சதவீத வட்டியில் விவசாயிகள் கடனுதவி பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரவேற்கத்தகுந்ததும் பாராட்டுக்குறியதுமாகும்.
மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லும்படி பாராட்டுக்குரிய அம்சம் ஏதுமில்லையென்பது ஏமாற்றத்தைத் தருகிறது. அத்துடன் தலித் மக்களின் மேம்பாட்டுக்கும், ஈழத்தமிழரின் மறுவாழ்வுக்கும் உரிய அறிவிப்புகள் இல்லாதது வேதனையளிக்கிறது.
இந்திய ராணுவச் செலுவுகளுக்கென சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பள்ளி, கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து சமூக வளர்ச்சித் திட்டங்களைவிட இந்தியப் பாதுகாப்பு எனும் பெயரில் செலவுத் திட்டமே மிகுதியாக உள்ளதை அறியமுடிகிறது. இதுவும் தேசத்தின் வளர்ச்சிக்கு உகந்ததாக அமையவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் சாதாரண ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வற்புறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.