புதிய சட்டசபை கட்டிட திறப்பு விழா: ஜெவிடம் பொதுத்துறை செயலாளர் நேரில் அழைப்பிதழ்
புதிய சட்டசபை கட்டிட திறப்பு விழா வரும் மார்ச் 13ம் தேதி நடக்கிறது. இதற்கான அழைப்பிதழை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முக்கிய தலைவர்களுக்கு வழங்கினார். இதில் இந்தத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதாவுக்கும் அழைப்பிதழ் வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன்படி ஜெயலலிதாவிடம் இன்று காலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் நேரில் வழங்கப்பட்டது. தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர் தேவஜோதி ஜெகராஜன் நேரில் சென்று இந்த அழைப்பிதழை வழங்கினார்.
'கலைஞர் வீ்ட்டு வசதித் திட்டம்'-மார்ச் 3ல் துவக்கம்:
இதற்கிடையே தமிழக அரசின் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை முதல்வர் கருணாநிதி மார்ச் 3ம் தேதி திருச்சியில் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் குடிசைகளே இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதற்காக கலைஞர் வீட்டு வசதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் படி ஊரகப்பகுதிகளில் உள்ள குடிசைகளுக்குப் பதிலாக 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் இலவசமாக கட்டிக் கொடுக்கப்படுகின்றன.
வருகிற 2010-2011ம் நிதி ஆண்டில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் கலைஞர் வீட்டு வசதி திட்டம் மூலம் நிரந்தர கான்கிரீட் வீடுகள் கட்ட அரசு முடிவு செய்துள்ளது.
கலைஞர் வீட்டு வசதி திட்ட தொடக்க விழா வருகிற 3ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது.
அண்ணா விளையாட்டரங்கில் மாலை 5 மணிக்கு தொடங்கும் விழாவில், முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
மாநில அமைச்சர்கள், மத்திய திமுக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, முன்னிலை வகிக்கிறார்கள்.
எம்.எல்.ஏ.க்கள் சுதர்சனம் (காங்), ஜி.கே.மணி (பா.ம.க.), பாலபாரதி (மார்க்.கம்யூ), சிவபுண்ணியம் (இந்திய கம்யூ), ரவிக்குமார் (வி.சிறுத்தை), அப்துல்பாசித் (முஸ்லிம்லீக்), பூவை. ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்), சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாவுக்கு வரும் முதல்வரையும், துணை முதல்வரையும் வரவேற்க திருச்சி திமுக சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.