தீப்பெட்டி நிறுவனத்தில் பயங்கர தீ - ரூ.30 லட்சம் பொருட்கள் நாசம்
கோவில்பட்டி: கோவில்பட்டி தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 30 லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டது.
கோவில்பட்டி வஉசி நகரை சேர்ந்தவர் கேசவன். இவருக்கு சொந்தமான தீக்குச்சி விற்பனை கம்பெனி கோவில்பட்டி வடக்கு திட்டக்குளத்தில் உள்ளது.
நேற்று மாலை ஊழியர்கள் வேலையை முடித்து விட்டு கம்பெனியை பூட்டி விட்டு சென்றனர். இரவு கம்பெனி உள்ளே இருந்து கரும்புகை வந்தது. இதனால் அதி்ர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு அதிகாரி செல்வராஜ் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயை அணைக்க முயற்பட்டபோது வண்டியில் இருந்த தண்ணீர் மோட்டார் பழுதானது.
இதனால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தீயும் கொளுத்து விட்டு எரிய ஆரம்பித்தது. வெப்பத்தின் காரணமாக கம்பெனி கட்டிடத்தில் பிளவு ஏற்பட்டது.
அருகே வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டுக்கு தீ பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். மின்சாரம் தூண்டிக்கப்பட்டது.
பின்னர் டிராக்டரில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களும், வீரர்களும் சேர்ந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கம்பெனியில் இருந்த 1500 மூட்டை தீக்குச்சிகள் மற்றும் பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. கட்டிடமும் சேதமடைந்தது. சேதமான பொருட்களின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி கிழக்கு போலீசார் வந்து பார்வையிட்டனர். தொழில் போட்டி காரணமாக யாராவது கம்பெனிக்கு தீ வைத்தார்களா, அல்லது மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications