பென்னாகரத்தில் 'தலை'க்கு ரூ.3,000 தருகிறார்கள்- பாமக புகார்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று தர்மபுரியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'பென்னாகரம் இடைத்தேர்தலுக்கு இன்னும் வேட்புமனு தாக்கலே நடைபெறாத நிலையில் வீடு, வீடாக சென்று பணம் கொடுத்து வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணம், இலவச பொருட்களை கொடுக்கும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தலை நேர்மையாக நடத்த தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நடவடிக்கை எடுப்பதன் மூலம் இந்தியா முழுவதும் "பென்னாகரம் பார்முலா'' உருவாகும். இது மற்ற தேர்தல்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும்.
பென்னாகரம் தொகுதியில் தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்த கூடுதல் தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும்.
டெல்லியில் ஒரு கட்சி வெங்காய விலையை காரணம் காட்டி தேர்தலில் வெற்றி பெற்றது. அதுபோன்று பென்னாகரம் தொகுதியில் குடிநீர் பிரச்னையால் பாமக வெற்றி பெறும்' என்றார்.
இதற்கிடையே, பென்னாகரம் தொகுதி பாமக தேர்தல் பணிக்குழு தலைவர் வேல்முருகன் சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வாக்காளர்களுக்கு வேட்டி-சேலை, ஜாக்கெட், துண்டு மற்றும் ஒரு குடும்பத்துக்கு, ஒரு ஆளுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் தொகுதி முழுவதும் வழங்கி வருகின்றனர்.
ஒரே இரவில் (வெள்ளிக்கிழமை) இரவோடு இரவாக 32 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டுவாடா செய்துள்ளனர். இதுபற்றி புகார் செய்தவர்களை வீச்சரிவாள், இரும்பு பைப், உருட்டுக்கட்டடை போன்ற படுபயங்கரமான ஆயுதங்களால் தாக்கினர்.
தலைமை தேர்தல் அதிகாரி, மேற்கண்ட சம்பவங்களுக்கு நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்று முதல் எனக்கு 1 இன்ஸ்பெக்டர், 10க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு அளித்து தாங்கள் உத்தரவிட வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications