பென்னாகரத்தில் வன்முறையை தூண்டிவிட பாமக முயற்சி: அமைச்சர் வேலு
தர்மபுரி: பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் வன்முறையை தூண்டி குழப்பம் ஏற்படுத்த பாமக முயற்சிப்பதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார்.
பென்னாகரம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, திமுகவினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இலவச வேட்டி சேலைகளை குடோன்களில் அடைத்து வைத்திருப்பதாக பாமத நிறுவனர் ராமதாஸ் புகார் கூறியிருந்தார்.
பென்னாகரத்தில் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் வேலு இப்புகாருக்கு மறுப்பு தெரிவித்து பேட்டி அளிக்கையில்,
'பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி வருகிறார். பொன்னகரம் பகுதி திமுக செயலாளர் சண்முகம் ஜவுளி தொழில் செய்து வருகிறார்.
அதற்காக முறையான பதிவு பெற்ற குடோனில் தேவைக்கு அதிகமாக உள்ள துணிகளை இருப்பு வைத்து எடுப்பது வழக்கம். இது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் நன்றாக தெரியும்.
அப்படி துணி சரக்கு வைத்திருந்த குடோனுக்கு அருகே கூடி கலாட்டா செய்து திறக்க சொல்லியிருக்கிறார்கள். அங்கு 100 வேட்டி சேலைகள் மட்டுமே இருந்துள்ளன. அவற்றிற்கான முறையான ரசீதுகளும் உள்ளன.
இந்த நிலையில் 2 ஆயிரம் பேருக்கு கொடுப்பதற்காக அங்கே வேட்டி சேலைகளை பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினரிடம் பாமகவினர் பொய் புகார் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பேரூர் கழக துணை செயலாளர் ராஜா சம்பவ இடத்திற்கு வந்து இதுதொடர்பாக தட்டி கேட்டுள்ளார்.
அவரை சாதி பெயரை சொல்லி திட்டியுள்ளனர். இதுதொடர்பாக அவர் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட தாசம்பட்டி பகுதியில் திமுகவினர் வேட்டி-சேலைகளை வினியோகம் செய்வதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது அங்கு வேட்டி சேலை வினியோகித்ததாக ஒருவரை பா.ம.க.வினர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
விசாரணையில் அவர் திமுகவை சேர்ந்தவரே இல்லை என்பது தெரியவந்துள்ளது. பெரும்பாலை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒண்டிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த திமுக கிளை செயலாளர் குமார் மீது வேட்டி-சேலைகள் வினியோகம் செய்ததாக புகார் செய்துள்ளனர்.
வேட்டி-சேலை வழங்கியதாக கூறப்படும் நாளில் அவர் ஊரிலேயே இல்லை என்பது பின்னர் தெரியவந்தது. இவ்வாறு திட்டமிட்டு பொய் புகார்களை கூறி அவற்றை உண்மையாக ஜோடிப்பதற்காக இதுபோன்ற திட்டமிட்ட முயற்சிகளை செய்து வருகிறார்கள்.
தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாக இதுபோன்ற முறைகேடுகளை செய்து அவற்றை தேர்தல் ஆணையத்திடம் அவற்றை புகாராக கொடுத்து இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே பாமகவினர் இப்படி நடந்துகொள்கின்றனர்.
நலம்பரம்பட்டி, பலிஞ்ரஅள்ளி ஆகிய பகுதிகளில் 50 பேர் கொண்ட கும்பல் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று தி.மு.க.விற்கு ஓட்டு போட்டால் நடப்பதே வேறு என்று பொதுமக்களை மிரட்டி இருக்கிறார்கள். வன்முறையை தூண்டி குழப்பம் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்' என்றார்.












Click it and Unblock the Notifications