கச்சத்தீவில் அந்தோணியார் திருவிழா- சங்கமித்த தமிழர்கள்
கச்சத்தீவு: கச்சத்தீவில் இன்று நடந்த புனித அந்தோணியார் திருவிழாவில் தமிழக மற்றும் ஈழத் தமிழர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் வழிபட்டனர்.
இலங்கையில் அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்த ஆண்டு கச்சதீவு திருவிழாவை நடத்த அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர், கச்சதீவு திருவிழாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி கச்சதீவில் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா, இன்று காலை திருப்பலி, தேர்பவனி நிகழ்வுகளுடன் நிறைவு பெற்றது.
இந்தத் திருவிழாவில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் விசைப் படகுகள் மூலம் கச்சத்தீவுக்குச் சென்றனர்.
அனைவரும் முழுமையாக சோதிக்கப்பட்டு கச்சத்தீவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தேறின. நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இரு நாட்டு தமிழர்களும் சந்தித்துக் கொண்டதால் அங்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் அலை மோதியது.












Click it and Unblock the Notifications