விசாகப்பட்டனம் மருத்துவமனைக்குள் புகுந்து சிசுவைக் கவ்விச் சென்ற நாய்
விசாகப்பட்டனம்: விசாகப்பட்டனத்தில் உள்ள மருத்துவமனைக்குள் புகுந்த நாய், அங்கிருந்த பச்சிளம் குழந்தையைக் கவ்விச் சென்று விட்டது.
விசாகப்பட்டினம் அனகாபள்ளியைச் சேர்ந்தவர் அனுராதா. அனுராதா கர்ப்பமாக இருந்தார். அவருக்கு 7-வது மாதத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் உள்ள பிரபலமான கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அனுராதாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. குறை பிரசவம் என்பதால் தாயை கவனிப்பதில் டாக்டர்கள் மும்முரமாக இருந்தனர்.
இந்த நிலையில் நாய் ஒன்று மருத்துவமனைக்குள் புகுந்து குழந்தையை வாயில் கவ்வி எடுத்துச் சென்று விட்டது. குழந்தையைக் காணாமல் அனைவரும் தேடிக் கொண்டிருந்தபோது, நாய் ஒன்று குழந்தையைக் கவ்விச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து நாயைத் துரத்திச் சென்றபோது, அது குழந்தையை ஒரு இடத்தில் போட்டு விட்டுச் சென்றது தெரிய வந்தது. குழந்தையை எடுத்துப் பார்த்தபோது அது உயிரிழந்து இருந்தது.
ஆனால் குழந்தை இறந்தேதான் பிறந்தது, நாயால் இறக்கவில்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இதை பெண்ணின் உறவினர்கள் மறுத்துள்ளனர். குழந்தை உயிருடன்தான் பிறந்தது. அவர்களின் கவனக்குறைவால்தான் பச்சிளம் குழந்தையின் உயிர் போயுள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாய் வந்து குழந்தையைக் கவ்விச் செல்லும் அளவுக்கு கவனக்குறைவாக இருந்த மருத்துவமனை நிர்வாகம் தற்போது பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
நோயாளியை பூட்டிச் சென்ற மருத்துவமனை ஊழியர்கள்:
இதற்கிடையே ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வந்த நோயாளியை உள்ளே வைத்துப் பூட்டி விட்டு அனைவரும் வீட்டுக்குப் போய் விட்டனர். அவர் அலறித் துடித்ததைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து வந்து அவரை மீட்டுள்ளனர்.
முத்துவ குண்ட்லா என்ற ஊரைச் சேர்ந்தவர் பெத்தண்ணா (48). காய்ச்சலால் அவதிப்பட்டதால் அருகில் கனகானபள்ளியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் குளுக்கோஸ் ஏற்றினர். பின்னர் நர்சுகளிடம் அவரைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டுச் சென்றுள்ளனர்.
டாக்டர்கள் அந்தப் பக்கம் நகர்ந்ததும்,நர்சுகள் வேறு பக்கமாக போய் விட்டனர். பின்னர் பெத்தண்ணாவுக்கு குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருப்பதையே மறந்து வீட்டுக்கும் கிளம்பிப் போய் விட்டனர்.
மருத்துவமனையில் அனைவரும் போய் விடவே, உள்ளே யாரும் இல்லை என்று நினைத்து மருத்துவமனை வாட்ச்மேன் மருத்துவமனையைப் பூட்டி விட்டு வீட்டுக்குப் போய் விட்டார்.
இந்த நிலையில் குளுக்கோஸ் தீர்ந்ததைத் தொடர்ந்து பெத்தண்ணாவின் உடலிலிருந்து ரத்தம் வெளியேற ஆரம்பித்தது. இதையடுத்து அவர் சத்தம் போட்டு நர்சுகளைக் கூப்பிட்டுள்ளார். ஆனால் மருத்துவமனையைப் பூட்டி விட்டு அனைவரும் போய் விட்டதை அறிந்து சத்தம் போட்டு அலறியுள்ளார்.
அவரது சத்தம் கேட்டு வெளியில் இருந்தவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்குப் போன் செய்து தகவல் தெரிவித்தனர்.
போலீஸாருக்கும் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து மருத்துவமனை பூட்டை உடைத்து பெத்தண்ணாவை மீட்டு வேறு ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மிகவும் பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட மருத்துவமனை மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications