சமத்துவ உரிமை பிச்சை அல்ல, நமது உரிமை-கி.வீரமணி
சென்னை: சமத்துவ உரிமைகளைப் போராடிப் பெறுவோம்.
நாம் கேட்பது பிச்சையல்ல, நமது உரிமை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.
மதுரை வண்டியூர் சுற்றுச்சாலையில் அமைந்துள்ள திடலில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சமூக எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தேசியத் தலைவர் அப்துல் ரஹ்மான் பேசுகையில்,
சமூக நீதித் தளத்தில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அதற்குக் காரணம் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் பணி மற்றும் அவர் உருவாக்கிய இயக்கம்தான் மற்ற மாநிலங்கள் சாதிக்க நினைக்காத பல்வேறு சமூக நீதி நடவடிக்கைகளை தமிழ்நாடு நடைமுறைப்படுத்தி வருகிறது.
இருப்பினும் தந்தை பெரியாரின் வழிவந்த திராவிட அரசியல் கட்சிகளின் துணை கொண்டு பாஜக தமிழகத்தில் காலூன்றியது மிகவும் வருத்தத்திற்குரியது என்றார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில், நாமெல்லாம் உருவத்தால் பலராயினும், உள்ளத்தால், சமூகத்தில், சமத்துவத்திற்குப் பாடுபடும் பண்பாட்டில் நாம் அனைவரும் ஒருவரே.
மாநாட்டு மேடைக்கு வந்ததும் எங்களுக்கு விருந்தினர் அலங்கார அட்டையினை சட்டையில் குத்திவிட்டார்கள். நாங்கள் விருந்தினர் அல்ல; உங்களோடு சேர்ந்து போராடுகின்ற சக போராளி. நம் அனைவருக்கும் ஒரே நோக்கு. அதுதான் சமூக எழுச்சி.
திராவிடக் கட்சிகள் பாஜகவுக்கு துணை போவதுபற்றி இங்கு குறிப்பிட்டனர். திராவிட கட்சிகள் அந்த நிலையிலிருந்து மாறி வர, திராவிடர் கழகம் பெரிதும் பாடுபட்டது. அதில் வெற்றியும் கண்டு வருகிறது.
பாஜக பாதையில் சென்ற கட்சிகளை சரியான பாதையில் திருப்பிவிட்டதில், திராவிடர் கழகத்திற்குப் பெரும் பங்கு உண்டு. இந்த மண்ணில் காவிகள் காலூன்றி விட முடியாது. சங் பரிவார் கும்பல் தலைதூக்க முடியாது.
நீங்களெல்லாம் கைபர், போலன் கணவாய் வழியாக இந்நாட்டிற்கு வந்தவர்கள் அல்லர். இந்த மண்ணில் பிறந்தவர்கள் நீங்கள். இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்கள். சமூக லட்சிய வேட்கை கொண்டவர்கள்.
நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களில் முஸ்லிம் சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். கல்வி, வேலை வாய்ப்புகளிலும் அவர்களுக்கு உரிய பங்கு அளிக்கப்படவில்லை. சமத்துவ உரிமைகளைப் போராடி பெறவேண்டும். நாம் கேட்பது பிச்சை அல்ல; நமது உரிமை. உரிமைகளை மீட்டு எடுப்பதற்கான உரிமைப் போரில் நாம் ஒற்றுமையாய் இருப்போம். போராடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications