இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்: 2 மடங்கு அதிகரிக்க செளதி முடிவு

செளதி சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கும் அந் நாட்டு அரசர் அப்துல்லா பின் அப்துல் அஜீசும் வரலாற்றுச் சிறப்பு மிக்க 'ரியாத் ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டுள்ளனர்.
குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைத்துக் கொள்வது உள்பட பாதுகாப்பு, பொருளாதார, ராணுவ, அரசியல் ஒத்துழைப்புக்கு இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும்.
மேலும் தீவிரவாதத்தை எதி்ர்கொள்வது, தீவிரவாதிகளுக்கு பணம் செல்வதைத் தடுப்பது, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு, ஆயுத-மனித கடத்தலைத் தடுப்பது ஆகிய விவகாரங்களிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்றும் இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய்-உதவ முன் வந்த செளதி:
இதற்கிடையே இந்தியாவில் அதிகரித்து வரும் பெட்ரோலியப் பொருட்களின் தேவையை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக்க செளதி முன் வந்துள்ளது.
இது தொடர்பாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, அந் நாட்டு கனிம வளத்துறை அமைச்சர் அலி அல் நைமியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
இப்போது இந்தியாவுக்கு ஆண்டுதோறும் 25.5 மில்லியன் டன் கச்சா எண்ணெயையை செளதி ஏற்றுமதி செய்து வருகிறது. இதை 40 மில்லியன் டன்னாக அதிகரிக்க செளதி ஒப்புக் கொண்டுள்ளது.
அதே போல பாரதீப்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அமைத்து வரும் எணணெய் சுத்திகரிப்பு ஆலையில் செளதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்கு 10 சதவீத பங்கைத் தரவும் இந்தியா முன் வந்துள்ளது. இதன்படி அந்த சுத்திகரிப்பு நிலையத்தில் செளதி 650 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளது.
பிரதமருக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்த செளதி:
3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு செளதி அரேபிய அரசும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனங்களும் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளன.
பிரதமரை அரசர் அப்துல்லாவின் தம்பியும் பாதுகாப்பு அமைச்சருமான இளவசர் சுல்தான் பின் அப்துல் அஜீஸ் விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். அவருடன் ஒட்டுமொத்த செளதி அமைச்சரவையும் விமான நிலையத்துக்கு வந்து மன்மோகன் சிங்கை வரவேற்றது பிரதமருக்கு அந் நாடு மிக அதிக முக்கியத்துவம் தந்துள்ளதைக் காட்டுகிறது.
பின் அல் ரவ்தா மாளிகையில் நடந்த வரவேற்பில் பிரதமருக்கு அரசர் அப்துல்லா சிறப்பான விருந்தும் அளித்தார். அதன் பின்னர் இருவரும் 10 சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் அடங்கிய ரியாத் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய இரு தலைவர்களும்,
பாகிஸ்தானில் பாதுகாப்பின்மையும், ஒற்றுமையின்மையும் காணப்படுவது கவலை அளிப்பதாகவும், ஆப்கானிஸ்தான் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பது அவசியம் என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
தலிபான்களுடன் தொடர்பில்லை-செளதி:
அப்போது அந் நாட்டு வெளியுறவு அமைச்சுரம் இளவசருமான அல் பைசல் கூறுகையில், பாகிஸ்தான் எங்கள் நட்பு நாடு. அதனால் அங்கு நிலவும் அபாயகரமான சூழல் குறித்து மிகுந்த கவலை கொண்டிருக்கிறோம்.
ஆப்கானிஸ்தானிலும் உலகின் வேறு பகுதிகளிலும் அல்கொய்தா மற்றும் தலீபான் தீவிரவாதிகளின் பயங்கரவாதத்தை நாம் ஒருங்கிணைந்து சமாளிக்க வேண்டும்.
எங்களுக்கும், தலீபான்-அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே எந்தவித தொடர்பும் கிடையாது. எப்போது, அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு தலீபான்கள் அடைக்கலம் கொடுத்தார்களோ, அப்போதே நாங்கள் தலீபான்களுடன் உறவை முறித்துக்கொண்டு விட்டோம் என்றார்.
இந் நிலையில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் இன்று இந்தியா கிளம்பினார்.












Click it and Unblock the Notifications