கயிறு தயாரிப்பு தொழில் தொடங்க 40% மானியத்துடன் ரூ.5 லட்சம் கடன்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், கயிறு தயாரிப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியக் கயிறு வாரிய தலைவர் விஜயராகவன் கலந்துகொண்டு பேசுகையில்,
'நமது நாட்டில் கயிறு ஏற்றுமதி ஆண்டுதோறும், குறிப்பிட்ட இலக்கை தாண்டி கூடுதலாகி வருகிறது. கடந்த 2008-09ல், ஏற்றுமதி இலக்கு ரூ.608 என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரூ.640 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
2009-10ம் ஆண்டில், ரூ.700 கோடி நிர்ணயிக்கப்பட்டு, 750 கோடிக்கு ஏற்றுமதியாகும் வாய்ப்பு உள்ளது. கயிறு ஏற்றுமதியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் கயிறு தொழில் வளர்ச்சிக்கு, ரூ.243 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.99 கோடி மானியமாகும்.
மத்திய பட்ஜெட்டில் தொழில் புணரமைப்பிற்கு ரூ.68 கோடி, கிராம கயிறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.19 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிங்கம்புணரியில் ஆறு கோடி மதிப்பில் கயிறு தயாரிப்பு தொழிற்கூடங்கள் மையம் (கிளஸ்ட்டர்) துவக்கப்பட உள்ளது. இதில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சிவகங்கை மாவட்டத்தில் கயிறு வாரிய துணை மண்டல அலுவலகம் விரைவில் அமைக்கப்படும். இங்கு தொழில் துவங்குவோருக்கு 40 சதவீத மானியத்துடன், ஐந்து லட்ச ரூபாய் கடன் வழங்கப்படும்' என்றார்.