உகாண்டா: நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் பலி!
கம்பாலா: கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
பலியானோரின் எண்ணிக்கை 300ஐ தாண்டும் என மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
உகாண்டாவின் கிழக்கு மலைப் பகுதியில் உள்ள புடாடா மாவட்டத்தில் இந்த நிலசரிவு ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமங்களில் இருந்த வீடுகள், கடைகள் என அனைத்தும் இடிந்து விழுந்தன.
இந்த இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். மலைப் பகுதியைச் சேர்ந்த குக்கிராமங்கள் என்றாலும் மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேரிடர் நிர்வாகத் துறை அமைச்சர் நிலவரம் குறித்து குறிப்பிடுகையில், தனது முன்னிலையில் மட்டும் 58 உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் பல்வேறு இடங்களிலும் புதைந்து கிடக்கும் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டும் என மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள செஞ்சிலுவை சங்கத்தினர் கூறுகின்றனர்.
பல இடங்களில் இடிபாடுகளில் சிக்கி உயிர் பிழைத்துள்ளவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.