சுங்கத்துறை அதிகாரி கொலை-துணை நடிகை சரண்
ஆதம்பாக்கம் ஆபீசர்ஸ் காலனி 5-வது தெருவில் வசித்து வந்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி சாம்சன் (43) ஞாயிற்றுக்கிழமை இரவு மனைவி டெய்சி ஜெயராணி மகன்கள் எரிக்சன்), ராபின்சன் ஆகியோர் கண் முன்னே, வீட்டு வாசலில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து டெய்சி ஜெயராணி கொடுத்த புகாரில், தங்கள் வீட்டின் முன் வசிக்கும் துணை நடிகையான பாவ்லினா தான் தனது மகன்களுடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாகத் தெரிவித்தார்.
இதையடுத்து தப்பியோடிய பாவ்லினா உள்ளிட்ட கொலையாளிகள் 12 பேரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந் நிலையில் பாவுலினாவின் மகன் அப்பு, கூலிப்படையை சேர்ந்த நாகூரான், லட்சுமணன் (27), வினோத் (21), கனி (21), பிரசன்னகுமார் (22), கோபிநாத் (21), ராஜசேகர் (23), மணிகண்டன் (21) ஆகியோர் நேற்று முன்தினமே செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந் நிலையில் பாவ்லினா (42), மகன் மணிகண்டன் (21), கூலிப்படையை சேர்ந்த சுகுமார் (27) ஆகியோர் நேற்று செங்கல்பட்டு மாஜிஸ்திரேட் நீதிமனறத்தில் சரணடைந்தார்.
பெண் ரெளடியான பாவ்லினா, அப் பகுதியில் கஞ்சா, கள்ளச் சாராயம் விற்று வந்தவர் ஆவார். மேலும் இவர் விபச்சார வழக்கிலும் கைதாகியுள்ளார்.
சில போலீஸ் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்த பாவ்லினா ஆதம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ரெளடித்தனம் செய்து வந்தார்.
கொலை செய்யப்பட்ட சாம்சன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராவில் அவரது கொலை அப்படியே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.