மக்கள் டிவி அலுவலகத்தை தாக்கிய சிபிஎம்-பதிலுக்கு வன்முறையில் குதித்த பாமக

பதிலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை பாமகவினர் தாக்கி சேதப்படுத்தினர். இதனால் சென்னையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டபிள்யூ.ஆர். வரதராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி மோதலே காரணம் என்று மக்கள் தொலைக்காட்சி நேற்று இரவு செய்தி வெளியிட்டது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தவறான செய்து, இதைக் கண்டித்து மக்கள் தொலைக்காட்சி முன்பு இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை 100க்கும் மேற்பட்டோர் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் முன்பு கூடினர்.
11 மணிக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் வடசென்னை செயலாளர் சண்முகம், தென் சென்னை அமைப்பாளர் பீமாராவ் ஆகியோர் தலைமையில் சுமார் 100 பேர் திரண்டு வந்தனர்.
அவர்கள் மக்கள் டி.வி.க்கு எதிராக கோஷம் எழுப்பியபடி அலுவலக வாசல் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்தனர். அதையும் மீறி சிலர் உள்ளே புகுந்தனர்.
அப்போது மக்கள் டி.வி. அலுவலகம் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. அலுவலகத்தின் காவலாளியை சரமாரியாக தாக்கி விட்டு உள்ளே ஓடினர். அவர்களை போலீசார் தடுத்து வெளியே தள்ளினார்கள். ஆனாலும் சிலர் தொடர்ந்து கல்வீசினார்கள். இதில் ஊழியர்கள் பாபு, கார்த்திக் ஆகியோருக்கு கண்ணாடி குத்தி காயம் ஏற்பட்டது.
இதேபோல் கேமராமேன் ராஜேசும் காயம் அடைந்தார். அங்கிருந்த இருசக்கர வாகனங்களையும், காரையும் அடித்து நொறுக்கினர். கல்வீச்சில் மக்கள் டி.வி. அலுவலகத்தின் முதல் மாடியில் இருந்த ஒளிபரப்பு சாதனங்களும் சேதம் அடைந்தன.
வெளியே நின்ற கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் டி.வி. மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். 92 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மக்கள் டி.வி. அலுவலகம் தாக்கப்பட்ட தகவல் அறிந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, பா.ம.க. வக்கீல் பிரிவு செயலாளர் பாபு உள்பட ஏராளமானோர் மக்கள் டி.வி. அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது மக்கள் டி.வி. அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த போலீஸ் அதிகாரிகளுக்கும்- பா.ம.க. வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நீங்கள் நினைத்திருந்தால் மெயின் ரோட்டிலேயே தடுத்திருக்கலாம். அலுவலகத்தை சூறையாடியவர்களை உடனே விரட்டி அடித்திருக்கலாம் என்று போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.
பதிலுக்கு பாமகவினர் தாக்குதல்...
மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்ட தகவல் பரவியதும், தி.நகரில் போக் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையகத்திற்கு பாமகவினர் திரண்டு சென்றனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் சிபிஎம் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த மேஜை நாற்காலி, டைப் ரைட்டர் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
அறைக்குள் ஓடி தப்பிய ஜி.ராமகிருஷ்ணன்...
மேலும் அங்கிருந்த மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தி புகைப்படமும் உடைத்து சேதப்படுத்தப்பட்டது.
தாக்குதல் சம்பவம் நடந்தபோது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். அவர்கள் ஒரு அறையில் இருந்து கொண்டு உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டனர்.
அலுவலகத்தின் மீது சரமாரிமாக கற்களும் வீசப்பட்டன. இதில் அலுவலகத்தின் கண்ணாடிகள் நொறுங்கின. அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி போர்டு அடித்து நொறுக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்த கோப்புகளும் தூக்கி வீசப்பட்டன.
பாதுகாப்புக்காக வந்த 2 போலீஸார்...
இச்சம்பவத்தை நேரில் பார்த்த கம்யூனிஸ்டு நிர்வாகி சம்பத் கூறும்போது, எங்களது அலுவலகத்திற்கு போன் செய்து விட்டுதான் பா.ம.க.வினர் தாக்குதலில் ஈடுபட புறப்பட்டு வந்தனர். அதற்குள் நாங்கள் போலீசுக்கு தகவல் சொன்னோம். 2 போலீசார் பாதுகாப்புக்காக வந்திருந்தனர். ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றார்.
பெரும் கூட்டமாக தாக்க வருகிறார்கள் என்று தகவல் தெரிவித்தும் வெறும் 2 போலீஸார் மட்டும் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டது வேடிக்கையாக உள்ளது.
சிபிஎம் தொண்டர்களும், பாமகவினரும் நடத்திய இந்த வன்முறைச் சம்பவத்தால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரு கட்சிகளின் அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications