உலகக் கோப்பை ஹாக்கி- இந்தியாவுக்கு 2வது தோல்வி - அரை இறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்தது
டெல்லி: ஸ்பெயினுடன் நடந்த மோதலில் இந்தியா 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து அரை இறுதிக் கனவு தகரும் நிலையைச் சந்தித்துள்ளது.
உலகக் கோப்பை ஹாக்கித் தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.
முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்தியா, 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் நேற்று 3வது போட்டியில் வலுவான ஸ்பெயினை சந்தித்தது.
நேற்று நடந்த போட்டி இரு அணிகளுக்குமே கிட்டத்தட்ட வாழ்வா சாவா போட்டிதான். காரணம், ஸ்பெயின் அணியும் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இருந்தது.
முதல் பாதி ஆட்டத்தின்போது ஸ்பெயின் 2-0 என்ற கணக்கில் முன்னிலை எடுத்து விட்டது. பின்னர் 2வது பாதியில் மேலும் 3 கோல்களைப் போட்டு இந்தியாவை திணறடித்து விட்டது.
முதல் பாதியில் கோல் அடிக்க முடியாமல் போன இந்தியா, 2வது பாதி ஆட்டத்தில் சற்று வீறு கொண்டு எழுந்தது. சந்தீப் சிங் மூலம் ஒரு கோல் கிடைத்தது. அடுத்த நான்கு நிமிடங்களில் மேலும் ஒரு கோலையும் இந்தியா போட்டது. ஆனாலும் அது போதுமானதாக இல்லை.
இந்தத் தோல்வியின் மூலம் இந்தியாவின் அரை இறுதிக் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. இன்னும் 2 போட்டியில் இந்தியா ஆட வேண்டியுள்ளது. அந்த இரண்டிலும் இந்தியா கண்டிப்பாக வென்றாக வேண்டும். அதில் ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால் கூட அத்தோடு கதை முடிந்தது.












Click it and Unblock the Notifications