தினகரன் குடும்பத்தினர் நில ஆக்கிரமிப்பு செய்தது உண்மை- மத்திய குழு அறிக்கை

இந்த குழுவின் அறிக்கையை மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் வழங்கியுள்ளார்.
நீதிபதி தினகரன் குடும்பத்தினர் நில ஆக்கிரமிப்பு செய்ததை இந்த ஆய்வறிக்கை உறுதிபடுத்துவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்தவர் நீதிபதி தினகரன். கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இவர், சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவில் உள்ள காவேரிராஜபுரத்தில் ஏராளமான நிலங்களை முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.
காவேரிராஜபுரத்தில் நீதிபதி தினகரனுக்கு சொந்தமாக 600க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 447 ஏக்கர் நிலம்தான் அவருக்கு சொந்தமானது.
மீதமுள்ள 180 ஏக்கர் அரசாங்க புறம்போக்கு நிலம், ஏரி மற்றும் கால்வாய்க்கான நிலங்கள், கிராமப் பொது வழிக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் என்றும் அவற்றை தினகரன் முறைகேடாக ஆக்கிரமித்து அனுபவித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.
அபகரித்த நிலங்களில் பல்வேறு செடிகளை வைத்து தோட்டம் அமைத்துள்ளார் என்றும், இடத்தை அரசு மீட்டு காவேரிராஜபுரம் ஏழை மக்களுக்கு மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தினகரன், 199 ஏக்கர் நிலத்தை முறைகேடாக ஆக்கிரமித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட தினகரன் இந்த ஆய்வறிக்கையை மறுத்தார்.
இதையடுத்து, இப்பிரச்னை குறித்து ஆராய இந்திய நில அளவைத் துறை அதிகாரிகள் சஞ்சய்குமார், சிவகுமார், தர்மராஜ் ஆகிய மூன்று பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்தது.
மத்திய நில அளவைத்துறை உயர் அதிகாரி சஞ்சய்குமார் தலைமையில் தயாளன், கருப்பையா உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஜனவரி மாதம் முதல் 2 மாதங்களாக காவேரிராஜபுரத்தில் தினகரன் தோட்டத்துக்குச் சென்று ஆய்வு செய்து வந்தனர்.
நிலங்களை அளந்து, அந்தந்த பிரிவைச் சேர்ந்த இடங்களுக்கான சர்வே எண், வரைபடம் உள்ளிட்ட தகவல்களை இக்குழுவினர் சேகரித்தனர்.
மேலும், நில விவகாரம் தொடர்பாக தினகரனின் குடும்பத்தினர், குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனங்கள், கிராம மக்கள், மாவட்ட ஆட்சியாளர், உள்ளூர் அதிகாரிகள் ஆகியோரிடமும் மத்திய குழுவினர் விசாரணை நடத்தினர்.
ஆய்வுப் பணிகளை முடித்த மத்திய குழுவினர் தங்களின் அறிக்கையை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளரிடம் சமர்பித்தனர். அவர் மூலமாக இந்த அறிக்கை மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த அறிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று அளித்துள்ளார்.
மத்திய குழுவினர் நடத்திய ஆய்வு முடிவுகளும், மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆய்வுத் தகவல்களும் கிட்டத்தட்ட ஒத்துப்போவதாகவே உள்ளன என மத்திய நிலஅளவைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications