டபிள்யூ.ஆர்.வரதராஜன் தற்கொலைதான் செய்து கொண்டார் - போலீஸ் கமிஷனர்
சென்னை: மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டபிள்யூ.ஆர்.வரதராஜன், கொலை செய்யப்படவில்லை. நீரில் மூழ்கியே தற்கொலை செய்து கொண்டார் என்று பிரேதப் பரிசோதனையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
டபிள்யூ.ஆர்.வரதராஜன் மரணம் குறித்து சர்ச்சை எழுந்தது. சமீபத்தில் மக்கள் டிவி செய்தியில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், அது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டிருப்பதாகவும் இது கூறியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் டிவி அலுவலகத்தைத் தாக்க பதிலுக்கு பாமகவினர் மார்க்சிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கினர்.
இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதுகுறித்து ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
டபிள்யூ.ஆர்.வரதராஜன் தற்கொலைதான் செய்துகொண்டார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நீரில் மூழ்கியதால்தான் அவர் இறந்துள்ளார் என்று பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தெரிவித்துள்ளார்.
தடய அறிவியல் சோதனையில் அவரது வயிற்றில் இருந்து எடுத்த உள்ளுறுப்புகளில் நச்சுத்தன்மையுள்ள பொருள் எதுவும் இல்லை.
அவரது உடலில் சிறு காயங்கள் உள்ளன. ஆனால் அவற்றால் மரணம் ஏற்படவில்லை. ஏரியில் உள்ள ராட்சத குழாய்களின் வழியாக நடந்து சென்றபோது அவர் கீழே விழுந்து இந்தக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றார்.
நேற்று மாலை காவல்துறைக்கு பிரேதப் பரிசோதனை வந்து சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications