சாலைமறியல் செய்த பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி!
திருவெறும்பூர்: மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்படுத்திய காரை பொதுமக்கள் அடித்து உடைத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். கும்பலை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.
திருவெறும்பூர் காட்டூரில் உள்ளது ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி. இந்த பள்ளியில் திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
அரியமங்கலத்தில் இருந்து ஒரு ஆட்டோ அந்த பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு திருவெறும்பூரை நோக்கி புறப்பட்டது.
அப்போது, அரியமங்கலம் ஆயில் மில் பஸ் நிறுத்தம் அருகே அந்த ஆட்டோ சென்ற போது, தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஒரு கார் அந்த ஆட்டோ மீது மோதியது.
இதில் விக்னேஷ் நகரை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன் புவனேஷ்வரன்(13) ரோனஸ்(11) என்ற 6 ம் வகுப்பு மாணவன் மற்றும் 2 மாணவிகள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து, ஆவேசமான 2000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது.
மேலும், ஆசேமடைந்த மக்கள் சிலர் விபத்து ஏற்பட காரணமாக இருந்த காரை அடித்து உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு கலியமூர்த்தி திருவெறும்பூர் டி.எஸ்.பி. சிவக்குமார், திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காமராஜ், சப் இன்ஸ்பெக்டர் முருகையா மற்றும் போலீஸ் படையினர் அங்கு சென்று பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் சமரசத்தை ஏற்க மறுத்து பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் கும்பலை கலைக்க பொது மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் படு காயம் அடைந்தனர்.
அங்கு நின்று கொண்டு இருந்த 6 கன்னியாஸ்திரிகளும் தடியடியில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினர். போலீஸ் ரோந்து வாகனம் மற்றும் கார் மற்றும் 3 பஸ்கள் கல்வீசி உடைத்தனர்.
இதில் அந்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications