மம்தாவிடம் ஏன் தனியாக விவாதிக்க வேண்டும்?-சோனியா
டெல்லி: மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் ராஜீவ் காந்தியின் கனவு நனவாகியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றிய பின் மிக மகிழ்ச்சியாகக் காணப்பட்ட சோனியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
இந்த மசோதா நிறைவேற ஒத்துழைப்பு அளித்த பாஜக, இடதுசாரிகள், கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி. இந்த மசோதாவை எதிர்த்தவர்கள் தாங்கள் தவறவிட்ட வாய்ப்பை விரைவில் உணருவார்கள்.
இந்த மசோதாவை நிறைவேற்றினால் ஏற்படும் அரசியல் சாதக, பாதக விளைவுகளையும் எதிர்கொள்ள துணிந்துதான் அதை நிறைவேற்றுவது என்ற முடிவை எடுத்தோம்.
அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக லாலு பிரசாத்தும், முலாயம் சிங்கும் அறிவித்து இருக்கிறார்கள். ஆனால், அரசுக்கு ஆபத்து இல்லை என்று நான் கருதுகிறேன். எங்களுடைய முன்னாள் கூட்டணி கட்சிகளான ராஷ்டிரீய ஜனதா தளமும், சமாஜ்வாடியும் எங்களுடனேயே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், அவர்கள் இருப்பார்களா இல்லையா என்பதைக் கூற நான் ஜோதிடர் அல்ல.
மகளிருக்கு இட ஒதுக்கீடு என்பது ராஜீவ் காந்தியின் கனவாகும். அது தற்போது நிறைவேறியுள்ளது. மக்களவையிலும் இந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்படும். ஆனால், நடப்பு கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படுமா என்பது தெரியாது.
அமைச்சரவைக் கூட்டத்தில் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி மிகவும் உற்சாகமாக ஆதரவுக் குரல் எழுப்பியதாக அவருக்கு அடுத்து அமர்ந்திருந்தவர் தெரிவித்தார்.ஆனால், மாநிலங்களவை வாக்கெடுப்பில் திரிணமூல் கலந்து கொள்ளாததற்குக் காரணம் புரியவில்லை. மசோதாவின் முக்கியத்துவத்தை மம்தா புரிந்து கொள்வார் என நம்புகிறேன்.
அமைச்சரவைக் கூட்டத்தில் இதை ஆதரித்த மம்தா இப்போது அதை எதிர்ப்பது ஏன்?. அவர் இடம் பெற்ற கேபினட் கூட்டத்தில் இதை விவாதித்த பிறகு அவரிடம் மட்டும் மீண்டும் தனியாக நாங்கள் ஏன் விவாதிக்க வேண்டும்?.
லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோர் இந்த மசோதாவை எதிர்க்கின்றனர். 33 சதவீதத்தில் முஸ்லிம்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் தேர்தலில் போட்டியிட அவர்கள் வாய்ப்பளித்தால் யார் தடுக்கப் போகிறார்கள்?.
மாநிலங்களவை ஆண் உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இந்த மசோதாவுக்க ஆதரவளித்தது பாராட்டத்தக்கது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் குடியரசுத் தலைவராக ஒரு பெண்ணும், மக்களவைத் தலைவராக ஒரு பெண்ணும் உள்ளனர் என்பது பெருமைப்படதக்கது.
மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரியை சிலர் தாக்க முயன்றது கடும் கண்டனத்துக்குரியது.
ஓட்டெடுப்பின்போது பதற்றமாக இருந்தேன்:
இந்த மசோதா மீது ராஜ்யசபாவில் நடந்த ஓட்டெடுப்பை டி.வியில் பார்த்துக் கொண்டிருந்தபோது மிகவும் பதற்றமாக இருந்தேன் என்றார் சோனியா.
முன்னதாக மசோதா நிறைவேறும் முன் அதற்கு ஆதரவு கோரி லாலுவிடம் பேசிய சோனியா, உங்களுக்கு 7 மகள்கள் இருக்கிறார்கள். எனவே மசோதாவை நீங்கள் ஆதரிக்கத்தான் வேண்டும் என்றார். இதைக்கேட்டதும் லாலு பிரசாத் வாய்விட்டு சிரித்தார்.
ஜெயந்திக்கு பிரதமர் பாராட்டு:
ராஜ்யசபாவில் இந்த மசோதா மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங்,
அரசியலில் அதிகளவில் பெண்கள் பங்கு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தோம். இது நிறைவேற துணையாக இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு நன்றி.
இந்த மசோதா நிறைவேற, நிலைக்குழு தலைவராக இருந்து செயலாற்றிய ஜெயந்தி நடராஜனின் பணி மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் மிகவும் நன்றாக பணியாற்றினார். அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மக்களவையில் எப்போது தாக்கல்?:
இந் நிலையில் காங்கிரஸ் எம்பியான ஜெயந்தி நடராஜன் கூறுகையில், மக்களவையில் இந்த மசோதா எப்போது அறிமுகப்படுத்தப்படும்?, எப்போது ஓட்டெடுப்பு நடத்தப்படும்? என்பதை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பன்சால் முடிவு செய்வார் என்றார்.












Click it and Unblock the Notifications