ப.சிதம்பரம் மீது ஷூ வீசிய சீக்கிய பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டார்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து ப.சிதம்பரம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது ஜர்னைல் சிங் என்ற பத்திரிக்கையாளர் ஷூவை வீசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் டெல்லியில் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை வெறியாட்ட வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியின் சஜ்ஜன் குமார் உள்ளிட் 10 பேருக்கு டெல்லி கோர்ட் இன்று ஜாமீன் அளித்தது.
இதுதொடர்பான வழக்கை பார்வையிட ஜர்னைல் சிங், சிபிஐ தரப்பு சாட்சியான நிர்பிரீத் கவுர் என்பவருடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார்.
கோர்ட் சஜ்ஜன் குமார் உள்ளிட்டோருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டதும் கவுருடன் திரும்பினார் ஜர்னைல் சிங். அப்போது வழி மறித்த கும்பல் ஜர்னைல் சிங்கைத் தாக்கியது.
இதுகுறித்து ஜர்னைல் சிங் கூறுகையில், வழக்கில் முக்கிய சாட்சியான நிர்பிரீத் கவுர் உள்ளிட்ட கோர்ட்டுக்கு வந்திருந்த பல்வேறு சாட்சிகளை சஜ்ஜன் குமாரின் ஆட்கள் கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.
என்னையும் அவர்கள் தள்ளி விட்டுத் தாக்கினர். கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர்கள் மிரட்டினர். அனைவருமே சஜ்ஜன்குமாரின் ஆட்கள்தான் என்றார்.
இதுகுறித்து கோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் ஜர்னைல் சிங்.
1984ம் ஆண்டு இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 31ம் தேதி டெல்லியில் பெரும் கலவரம் வெடித்தது. சீக்கியர்கள் கும்பல் கும்பலாக கொன்று குவிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்ட சீக்கியர்களை காங்கிரஸ் கட்சியினர் கொலை செய்து வெறியாட்டம் போட்டனர்.
இந்த கலவரம் தொடர்பான வழக்குகளில் சஜ்ஜன் குமார் உள்ளிட்டோர் மீது 2 வழக்குகள் உள்ளன. ஆட்களை ஏவி சீக்கியர்களைப் படுகொலை செய்ததாக இவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.












Click it and Unblock the Notifications