பள்ளி, கல்லூரிகள் அருகே சிகரெட், பீடி விற்க தடை
சென்னை: பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு அருகே பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பலர் ஆர்வத்தின் காரணமாக சிகரெட் பிடிக்கிறார்கள். அத்தகைய மாணவர்கள் நோய்களுக்கு ஆளாகாமல் இருக்கவேண்டும் என்ற நல்ல கருத்தின் காரணமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள கல்வி நிறுவனங்கள் அருகே சிகரெட், பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்க தடை விதிக்கவேண்டும் என்று அனைத்து மாநில சுகாதாரத் துறைக்கும் கடிதம் அனுப்பி உள்ளது.
அதன்படி தமிழக சுகாதாரத்துறைக்கும் மத்திய சுகாதாரத் துறையிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கும் கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில்,
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் இருந்து 300 அடி தூரம் வரை சிகரெட், பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்க தடை விதிக்கவேண்டும். இந்த சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்து புகையிலை பொருட்கள் விற்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உள்ளது.
அதேபோல அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப கல்லூரி கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் புகையிலை பயன்படுத்தாத வளாகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications