நாங்கள் நல்ல தோழர்கள்-சென்னை கோர்ட்டில் சிபிஎம், பாமக வக்கீல்கள்!
சென்னை: பாமகவினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் நல்ல தோழர்களே. இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் யாரும் படுகாயமடையவில்லை. எனவே ஜாமீன் அளிக்க வேண்டும் என்று பாமக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் இணைந்து கோரிக்கை விடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
டபிள்யூ. ஆர்.வரதராஜன் மரணம் குறித்து சந்தேகங்கள் எழுப்பி மக்கள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இதையடுத்து கடந்த 5ஆம் தேதி மக்கள் டிவிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதன் அலுவலகத்தை தாக்கினார்கள்.
இதற்கு பதிலடியாக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் பாமகவினரால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மக்கள் டி.வி. அலுவலகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகமும் சேதம் அடைந்தன.
இரு சம்பவங்கள் தொடர்பாக விவசாயிகள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட 85 சிபிஎம் கட்சியினரும், 14 பாமகவினரும் கைது செய்யப்பட்டனர்.
அனைவரும் ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு கட்சிகளின் சார்பில் ஆஜராகிய வக்கீல்கள், இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமாக நடந்தது. இருதரப்பினரும் நல்ல நண்பர்களே. இந்த சம்பவத்தில் யாரும் படுகாயம் அடையவில்லை. எனவே கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூட்டா கேட்டுக் கொண்டனர்.
இதைக் கேட்டதும் அரசு வக்கீல் ஷாஜகான் ஜாமீன் அளிக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இருப்பினும், நீதிபதி தேவதாஸ் வழக்கில் கைதான 99 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் வழக்கில் கைதான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் திருச்சியில் தங்கி இருந்து அங்குள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தினந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் பாமகவினர் மேலூரில் தங்கிருந்து அங்குள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகி தினந்தோறும் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.












Click it and Unblock the Notifications