மண்டேலாவால் தென்னாப்பிரிக்கா நாசமாகிவிட்டது-மாஜி மனைவி புகார்!

தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் மண்டேலா.
நோபல் பரிசு உட்பட சர்வதேச அளவிலான 250க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று கவுரவிக்கப்பட்டுள்ளார்.
92 வயதான மண்டேலா, மூன்று திருமணங்கள் செய்துகொண்டவர். ஆறு குழந்தைகளும் 20க்கும் மேற்பட்ட பேரக் குழந்தைகளும் இவருக்கு உள்ளனர்.
இவரின் பேரன்களில் ஒருவரான மண்ட்லா மண்டேலா தென்னாப்பிரிக்க எம்.பி.யாவும் இருந்து வருகிறார்.
முதல் மனைவி எவெலின் டோகோ மாசே. திருமணமான 13 ஆண்டுகளில் மண்டேலாவும் இவரும் பிரிந்துவிட்டனர். கடந்த 2004ல் மாசே இறந்துவி்ட்டார்.
மண்டேலாவின் 2வது மனைவி வின்னி மடிகிசேலா. 27 ஆண்டுகள் சிறை வாசத்துக்கு பின்னர் 1990ல் விடுதலையானதை அடுத்து இரண்டே ஆண்டுகளில் மண்டேலாவுக்கும் வின்னிக்கு கருத்துவேறுபாடு முற்றியது.
1996ல் அதிகாரப்பூர்வமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
தனது 80வது பிறந்த நாளில் மூன்றாவது திருமணம் செய்தார். மறைந்த மொசாம்பிக் நாட்டு அதிபர் சமோரா மக்கெலின் மனைவியை மண்டேலா மூன்றாவது மனைவியாக ஏற்றுக்கொண்டார்.
கருப்பின மக்கள் மற்றும் வெள்ளையர் என அனைத்து சமூகத்தவர் மத்தியிலும் சாதகமான அபிப்பிராயத்தை பெற்றுள்ள மண்டேலா மீது, ஆட்சி முறை பற்றிய விமர்சனங்கள் அவ்வப்போது வருவதுண்டு.
இன பாகுபாடுக்கு எதிரான செயல்பாடுகள் ஒருபுறமிருந்தாலும், அதிபர் பதவியில் இருந்த காலத்தில் தென்னாப்பிரிக்காவின் முன்னேற்றத்தில் மண்டேலா அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மண்டேலாவின் 2வது மனைவி வின்னி லண்டன் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டில் மண்டேலாவுக்கு எதிராக காரசாரமான விமர்சனங்களை கூறியுள்ளார்.
வின்னி தனது பேட்டியில், 'மண்டேலா விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தில் அவரை கறுப்பின மக்கள் மிகவும் நம்பினார்கள். அவரை வழிகாட்டியாக நினைத்தனர்.
ஆனால் அவர் விடுதலையானதற்கு பிறகு நம்பிக்கைக்கு உரிய நபராக நடந்து கொள்ளவில்லை. வெள்ளைக்காரர்களுடன் சில சமரசங்களை ஏற்படுத்தி கொண்டார்.
வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருக்கும் வரை தென் ஆப்பிரிக்க பொருளாதாரம் நன்றாக இருந்தது. ஆனால் இப்போது தென் ஆப்பிரிக்கா நசிந்து விட்டது.
இதற்கு மண்டேலா ஆட்சிக்கு வந்ததும் சரியான திட்ட நடைமுறைகளை கொண்டு வராததே காரணம்.
1993ல் மண்டேலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கினார்கள். அவர் சிறையில் இருந்தபோது சிறை அதிகாரியாக இருந்த டிகிளார்க்குடன் சேர்ந்து இந்த விருது வழங்கப்பட்டது.
அவருடன் சேர்த்து இந்த விருதை வழங்கியதால் அதை ஏற்றுக் கொண்டது மண்டேலா செய்த பெரும் தவறு.
பெரிய தலைவரான மண்டேலா இப்போது கட்டுப்பாடு இழந்து செயல்படுகிறார். அவருடைய சில நடவடிக்கைகளால் நாடு நாசமாகிவிட்டது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
வின்னியின் இந்த விமர்சனம் குறித்து மண்டேலா தரப்பிலும், தென்னாப்பிரிக்கா தரப்பிலும் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications