கருணாநிதிக்கு நன்றி சொல்ல அரசு ஊழியர்கள் பேரணி!
சென்னை: பல்வேறு சலுகைகளை அறிவித்ததற்காக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் பேரணியை தமிழக அரசு ஊழியர்கள் வரும் 14ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க தலைவரும், நான்காம் பிரிவு அகில இந்திய தலைவருமான கே.கணேசன் கூறியதாவது:
தமிழக முதல்வர் கருணாநிதி அகில இந்திய அளவில் எந்த முதல்வரும் அறிவிக்காத வகையில் பல்வேறு சலுகைகளை அரசு ஊழியர்களுக்கு வழங்கி உள்ளார்.
சத்துணவு ஊழியர்களுக்கு அதிக சம்பளம், கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்கியது, அனைத்து துறைகளிலும் கருணை அடிப்படையில் வேலை, மருத்துவ காப்பீட்டு திட்டம்,
6வது ஊதியக்குழுவில் உள்ள குறைபாடுகளை களைந்திட ஒரு நபர் கமிஷன் அமைத்தது, மத்திய அரசுக்கு இணையாக உடனே அகவிலைப்படி வழங்கியது போன்ற பல்வேறு ஆணைகளை வழங்கியுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் மார்ச் 14ம் தேதி (ஞாயிறு) காலை 11 மணிக்கு சென்னையில் மாபெரும் பேரணி நடைபெறுகிறது.
பேரணி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து புறப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை மெரினா ஹோட்டல் வரை செல்கிறது. பேரணி முடிவில் அகில இந்திய பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.
பின்னர் அனைத்து மாநில நிர்வாகிகளுடன் முதல்வரை சந்தித்து நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறோம்.
ஜூன் மாதம் 28,29 தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாடு மற்றும் அலுவலக உதவியாளர்கள் மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு கொடுக்கிறோம்' என்றார்.












Click it and Unblock the Notifications