தியாகிகளுக்கு செய்த மரியாதை-ஜெ பட்டியல்!
சென்னை: ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு மணி மண்டபம் அமைக்க நிலம் ஒதுக்கியது எனது ஆட்சிக்காலத்தில் தான் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கொடநாட்டில் ரெஸ்ட் எடுத்து வரும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு நினைவு மண்டபங்கள் எழுப்பிய ஒரே இயக்கம் திமுக என்பது முற்றிலும் தவறானது.
அதிமுக ஆட்சியிலும் சுதந்திர போராட்டத் தியாகிகளுக்கு நினைவு மண்டபங்கள் எழுப்பப்பட்டன என்பதை கருணாநிதிக்கு இந்த சந்தர்ப்பத்தில் எடுத்துக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் நினைவாக, திருநெல்வேலியில் ரூ.75 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தொரப்பள்ளிக்கு அருகிலுள்ள மோர்னப்பள்ளியில் ராஜாஜிக்கு மணிமண்டபம் அமைத்திட ஒரு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அரச்சலூர் கிராமம் ஓடாநிலையில் தீரன் சின்னமலைக்கு மணி மண்டபம் அமைக்க 3 ஹெக்டேர் நிலம் ரூ.19.67 லட்சம் செலவில் கையகப்படுத்தப்பட்டது.
ரெட்டை மலை சீனிவாசன் நினைவுச் சின்னம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது; பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் கடைசி காலத்தில் வாழ்ந்த மதுரை - திருநகர் இல்லம் நினைவு இல்லமாக உருவாக்கப்படும் என்று அறிவித்தது எனது ஆட்சிக்காலத்தில் தான்.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழா நினைவாக, விருதுநகரில் நினைவுத்தூண் அமைக்கவும், மணிமண்டபம் அமைக்கவும் ரூ. 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2003ல் என்னால் அடிக்கல் நாட்டப்பட்டது.
திருப்பூர் குமரன் நூற்றாண்டு விழாவினையொட்டி, திருப்பூர் குமரன் நினைவகத்தில் மார்பளவு வெண்கலச்சிலை நிறுவப்பட்டது.
தியாகி செண்பகராமன் முழு உருவச்சிலை சென்னை, கிண்டியிலுள்ள காந்தி மண்டப வளாகத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை புதுப்பித்து நினைவகம் அமைக்கப்பட்டதும்; மருது சகோதரர்களுக்கு திருப்பத்தூரில் நினைவகம் அமைக்கப்பட்டதும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளை கவுரவிக்கும் விதமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதும் எனது ஆட்சி காலத்தில் தான்.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்திக்கு நினைவகம்; தந்தை பெரியாருக்கு வைக்கத்தில் நினைவகம்; காயிதே மில்லத் மணிமண்டபம் திறப்பு ஆகியவை எனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டன.
பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், வீரன் அழகுமுத்துக்கோன், மாநகரத் தந்தையாக இருந்த சிவராஜ் ஆகியோரின் திருவுருவச் சிலைகள் எனது ஆட்சிக்காலத்தில் திறக்கப்பட்டன.
சென்னையில் அம்பேத்கர் மணிமண்டபம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1993 ஆம் ஆண்டு என்னால் அடிக்கல் நாட்டப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்தில் உ.வே. சாமிநாத அய்யர் வீடு நினைவகமாக்கப்பட்டதும் எனது ஆட்சிக் காலத்தில் தான்.
இது போன்று பல உதாரணங்களை என்னால் சுட்டிக்காட்ட முடியும். உண்மை நிலை இவ்வாறு இருக்க, சுதந்திரப் போராட்டத்தியாகிகளுக்கு நினைவு மண்டபங்கள் எழுப்பிய ஒரே இயக்கம் திமுக என்று கருணாநிதி குறிப்பிடுவது சரியல்ல.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு, அவரது சொந்த ஊரில் மணிமண்டபம் அமைப்பதற்காக நிலம் பெறப்பட்டு, நாளும் குறிக்கப்பட்டு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்து இருக்கிறார்.
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பொருட்டு, கடந்த 2004ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஓமந்தூர் கிராமத்தில் 0.46.5 ஹெக்டேர் நிலம் எனது ஆட்சிக் காலத்தில் தான் கையகப்படுத்தப்பட்டது.
ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கருத்துரு தயாரிக்க திட்டமிடப்பட்டது என்பதை கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை அடுத்து, கருணாநிதி திமுக அரசின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன் பிறகு, ஓமந்தூர் கிராமத்தில் ஓ.பி. ராமசாமி ரெட்டியாருக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்து பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) 2006ம் ஆண்டில் அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.
இதனை பரிசீலித்த திமுக அரசு, மணிமண்டபம் அமைப்பது தொடர்பாக அரசின் ஒப்புதல் வேண்டி கோரப்பட்ட தங்களின் செயற்குறிப்பு தற்போது அரசால் ஏற்பதற்கில்லை எனத் தெரிவித்து, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தி (நினைவகங்கள்) துறை இணைச் செயலாளர் 2007ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் உயர் நிலைப்பள்ளி எனது ஆட்சிக்காலத்தில் புதுப்பிக்கப்பட்டு, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications