முன்ஜாமீன் கோரி நித்யானந்தாவின் சீடர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
சென்னை: தன்னைக் கைது செய்யக் கூடாது. முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி நித்தியானந்தாவின் சீடர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
அவரது பெயர் ஸ்ரீநித்ய சவரணானந்தா என்ற சந்திரன். இவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,
நான் ஹோமியோபதி மருத்துவராக பணியாற்றி வருகிறேன். 1993-ம் ஆண்டு முதல் நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சி என்ற இடத்தில் வசிக்கிறேன். டாக்டர் தொழில் தவிர டிராவல்ஸ் நிறுவனமும் நடத்தி வருகிறேன்.
இந்த நிலையில் ஒரு விபத்தில் சிக்கி, 16 ஆண்டுகள் படுக்கையில் இருந்தேன். இதனால் எனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. எனவே நண்பர்களின் ஆலோசனைப்படி நித்யானந்தாவை அணுகினேன். அவர் யோசனைப்படி ஆன்மிகத்தில் ஈடுபட்டதோடு, யோகாசனம் போன்ற பயிற்சியையும் படித்தேன். பின்னர் அவரது சீடரானேன்.
தற்போது நானும் பலருக்கு இந்த பயிற்சியை அளித்து வருகிறேன். நித்யானந்தாவின் சீடர்கள் கூட என்னிடம் பயிற்சி எடுத்துள்ளனர். இந்த நிலையில் நித்யானந்தா பற்றிய படத் தொகுப்பு சமீபத்தில் வெளியானது.
இதனால் மத உணர்வுகளை புண்படுத்துவது(இ.பி.கோ.295 (ஏ) சம்பந்தப்பட்ட வழக்கில் என்னையும் சிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் போலீசார் என்னையும் இந்த வழக்கில் சேர்த்து கைது செய்வார்கள் என்று சந்தேகம் எழுகிறது. எனவே எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
நேற்று இந்த மனு நீதிபதி நாகமுத்து முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் வக்கீல் முனியப்பராஜ் ஆஜராகி, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று கேட்டார். இதையடுத்து 12ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications