ஆண்களுக்கும் இட ஒதுக்கீடு தருவோம்-திரிணமூலுக்கு சோனியா பதில்
டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் ஆண்களுக்கும் இட ஒதுக்கீடு தந்தால் போச்சு என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியதால் லோக்சபாவில் சிரிப்பலை எழுந்தது.
மகளிர் மசோதா குறித்து நேற்று லோக்சபாவில் திரினமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசியபோது சோனியா எழுந்து இவ்வாறு கூறினார்.
மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பியான கல்யாண் பானர்ஜி, மகளிர் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார்.
அவர் கூறுகையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டால் ஆண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்படும் பட்சத்தில் மக்களவையிலும், சட்டப் பேரவைகளிலும் 33 சதவீத இடங்களும் பெண்களுக்கே ஒதுக்கப்படும். இதுதவிர, பொதுப் பிரிவிலும் அவர்கள் போட்டியிடுவர். இவ்வாறு போட்டியிடும்போது மொத்த இடங்களில் அதிகமான இடங்களை பெண்களே ஆக்கிரமிக்கும் நிலை உருவாகும் என்றார்.
படு கோபமாக, காரசாரமாக அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தடாலடியாக எழுந்தார் சோனியா. அவர் கூறுகையில், பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டாலும் மக்களவையிலும், பேரவைகளிலும் தொடர்ந்து ஆண்களுக்கே அதிக இடங்கள் இருக்கும்.
ஒருவேளை பெண்கள் இடஒதுக்கீட்டால் ஆண்கள் பாதிக்கப்படும் நிலை உருவானால் அப்போது ஆண்களுக்கும் இடஒதுக்கீடு கொண்டு வரப்படும் என்றதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.
சோனியாவின் பேச்சால் அப்செட் ஆன கல்யாண் பானர்ஜி தனது பேச்சை முடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.












Click it and Unblock the Notifications