தெலுங்கு தேசத்தை சீரழித்து விட்டார் சந்திரபாபு நாயுடு - சிவபார்வதி சீற்றம்
ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சியை சீரழித்து விட்டார் சந்திரபாபு நாயுடு. அவரை நீக்கி விட்டு என்.டி.ஆர்.பாலகிருஷ்ணாவை கட்சித் தலைவராக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்.டி.ஆரின் 2வது மனைவியான லட்சுமி சிவபார்வதி.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
எனது கணவர் என்.டி. ராமாராவிடம் இருந்து தெலுங்கு தேசம் கட்சியை கைப்பற்றிய சந்திரபாபு நாயுடு தனது திறமையற்ற நிர்வாகத்தால் கட்சியை சீரழித்துவிட்டார். கடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் தோல்வியை சந்தித்ததற்கும் அவர்தான் காரணம்.
எனவே என்.டி.ஆரின் வாரிசான பாலகிருஷ்ணாவை தெலுங்கு தேசத்திற்கு தலைவராக நியமிக்க வேண்டும். அவர் தலைமையில் கட்சி பலமானதாக மாறும். என்.டி.ஆர். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.
அவர் தலைவரானால் நானும் தெலுங்கு தேசத்தின் வெற்றிக்காக பிரசாரம் செய்வேன்.
என்.டி.ஆர். மகள் புரந்தரேஸ்வரி தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். பாலகிருஷ்ணா தெலுங்கு தேசம் தலைவரானால் புரந்தரேஸ்வரியும் இங்கு வந்து விடுவார். காங்கிரசை வீழ்த்த வேண்டுமானால் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார்.
--












Click it and Unblock the Notifications