மகளிர் மசோதா- பிரச்னை கிளப்பிய எம்பி - காங்.கில் சலசலப்பு
டெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்யும் முன்பு, சமூகத்தின் அனைத்து தரப்பினர் நலன்களும் கவனத்தில் கொண்டாக வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ஒருவர் கூறியுள்ளதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பீகாரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான முகமது ஆஸ்ரௌல் ஹக் இதுபற்றி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
'மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறி விட்டது. ஆனால் லோக்சபாலில் நிறைவேற்றப்படும் முன்பாக, சமுதாயத்தின் அனைத்து பிரிவினரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தாக வேண்டும்.
இந்த சட்ட மசோதாவில் எந்த ஒரு பாரபட்சமான அம்சமும் இடம்பெறக் கூடாது. அனைத்து தரப்பு மக்களின் நலன்களையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்' என்று குறிப்பிட்டார்.
கடந்த 14 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த மகளிர் மசோதா கடந்த வாரம் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரசோடு முக்கிய எதிர்க்கட்சிகளான பாஜக, கம்யூனிஸ்ட் மற்றும் திமுக, அதிமுக, தெலுங்கு தேசம் என பல்வேறு கட்சிகளும் ஒன்று சேர்ந்து ராஜ்யசபாவில் இந்த மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டன.
பாதி கிணறு தாண்டிவிட்ட நிலையில் இந்த மசோதா விரைவில் லோக்சபாவில் தாக்கலாக உள்ளது. அதிலும் வெற்றிகரமாக மசோதா நிறைவேறியாக வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் உள்ளது.
ஆனால், அதற்குள்ளாக பாஜகவில் இம்மசோதா தொடர்பான முரண்பாடுகள் எழத் தொடங்கிவிட்டன.
லோக்சபாவில் மகளிர் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக சில பாஜக உறுப்பினர்கள் கூறி வருகின்றனர்.
மசோதா தொடர்பாக தமது உறுப்பினர்களிடையே கிளம்பியுள்ள கருத்து வேறுபாட்டை போக்க பாஜ மூத்த தலைவர்கள் முயன்று வருகிறார்கள்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியிலும் இதே போன்ற கலகம் பீகார் எம்பி முகமது ஹக் மூலமாக தற்போது பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications