மாஜி எம்எல்ஏ உள்பட 14 பேர் மீது அடிதடி வழக்கு
சங்கரன்கோவில்: கிராமத்தில் வாறுகால் கட்டுவது தொடர்பாக இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக கடையநல்லூர் மாஜி எம்எல்ஏ உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் அருகே உள்ளது ஆராய்ச்சிபட்டி கிராமம். கடையநல்லூர் முன்னாள் எம்எல்ஏ சுப்பையா பாண்டியனின் சொந்த கிராமம் இது.
இங்கு பஞ்சாயத்து நிதியில் வாறுகால் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பாக இரண்டு கோஷ்டிகளிடையே பிரச்னை ஏற்பட்டது.
இதனால் கடந்த 9ம் தேதி சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் ஆராய்ச்சிபட்டியில் வாறுகால் கட்டுவது தொடர்பாக சமாதான கூட்டம் நடந்தது.
இருப்பினும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து சமாதான கூட்டத்திற்கு பின்னர், இரண்டு கோஷ்டிகளிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் முன்னாள் எம்எல்ஏ சுப்பையா பாண்டியனின் மருமகன் முருகன் கொடுத்த புகாரின் பேரில் மாரிக்காளை, சின்னத்துரை மகன் வெள்ளத்துரை, லெட்சுமணன் மகன் ராஜதுரை, மாரியப்பன் மகன் முருகன், அய்யாத்துரை, செல்வராஜ், வெள்ளத்துரை ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல ஆரிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் எம்எல்ஏ சுப்பையா பாண்டியன், அவரது மருமகன்கள் முருகன், கணபதி, மாரியப்பன், அய்யாத்துரை உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பனவடலிசத்திரம் இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications