ராஜ்யசபா தலைவரிடம் மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்ட் உத்தரவு ரத்தாகும் - மத்திய அரசு
டெல்லி: சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 7 எம்.பிக்களும் ராஜ்யசபா தலைவரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டால், அவர்களது சஸ்பெண்ட் உத்தரவு ரத்தாகும் வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில் மார்ச் 8ம் தேதி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
சிலர் ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி கையில் வைத்திருந்த மசோதா நகலைக் கிழித்து தூக்கிப் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அடுத்த நாள் 9ம் தேதி சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளத்தைச் சேர்ந்த 7 எம்.பிக்களை இந்த கூட்டத் தொடர் முழுமைக்கும் சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் அன்சாரி உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கைக்கு தற்போது எதிர்க்கட்சிகள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. பாஜகவிலும் கூட இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில் இந்த விவகாரம் வலுத்து வருவதைத் தொடர்ந்து, எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற பரிகாரம் ஒன்றைக் கூறியுள்ளது மத்திய அரசு.
இந்த பிரச்சினை, ராஜ்யசபாவில் நேற்று எதிரொலித்தது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்களுக்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும், அந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி பேசினார்.
அதேபோல சீதாராம் எச்சூரியும், சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்ரு கோரினார். இதற்கு காங்கிரஸ், ஆளும் கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால் கூறுகையில், உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்பதாக கூறினால் போதும். அல்லது வருத்தம் தெரிவிப்பதாக கூறினால் கூட போதும். சஸ்பெண்ட் உத்தரவு திரும்பப் பெறப்படும் வாய்ப்புள்ளது என்றார்.
அதேசமயம், சஸ்பெண்ட் ஆன எம்.பிக்கள், மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
இருப்பினும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications