போலி பாஸ்போர்ட் மூலம் சவுதி பயணம் - வாலிபர் கைது
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் சவுதி அரேபியா செல்ல இருந்தவரை பயண நாளில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதியை சேர்ந்த ஒருவர் போலி பெயரில் பாஸ்போர்ட் எடுத்து நேற்று வெளிநாடு செல்ல இருப்பதாக எஸ்பி ஆஸ்ரா கார்கின் இ-மெயிலுக்கு தகவல் வந்தது.
இதுகுறித்து திருவனந்தபுரம், சென்னை விமான நிலையங்களுக்கு போலீசார் தகவல் அளித்தனர். குற்றாலம் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இலஞ்சி ஜூப்லி இரண்டாவது மேலத்தெருவை சேர்ந்த செல்வகுமார் சிக்கினார். இவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் பெயரில் இருந்த ரேசன் கார்டை பயன்படுத்தி கடந்த 97 மார்ச் 26ம் தேதி பாஸ்போர்ட் வாங்கியுள்ளார்.
சவுதி அரேபியாவில் முஸ்லிம்களுக்கு வேலையில் முன்னுரிமை கிடைக்கும் என்பதால் முஸ்லிம் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் எடுத்ததாகவும் போலீசாரிடம் செல்வகுமார் தெரிவித்தார்.
இதுவரை 4 முறை போலி பாஸ்போர்ட் மூலம் சவுதி அரேபியா சென்று வந்த செல்வகுமார் நேற்று ஐந்தாம் முறையாக காலை 5.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்று விமானம் மூலம் பக்ரைன் சென்று அங்கிருந்து சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டுருந்தார்.
அதற்குள் அவரை போலீசார் மடக்கி கைது செய்தனர். அவரிடம் இருந்த போலி பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து எஸ்பி ஆஸ்ரா கார்க் கூறும்போது, 'நெல்லை மாவட்டத்தில் யாராவது போலி பெயர், போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் வாங்கியது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது போன்ற தகவல்களை [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம்' என்றார்.












Click it and Unblock the Notifications